Friday, December 5, 2014

தனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் 2

தனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் 2

இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...

ராமேஸ்வரமும் மற்ற பகுதிகளும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப ஆரம்பித்திருந்தாலும், தனுஷ்கோடி முழுவதுமாய் அழிந்திருந்தது. இந்நேரத்தில் பத்திரிகைகள் வேறுவிதமான ஒரு பீதியைக் கிளப்பின, "தனுஷ்கோடி புயலில் சிக்கிய ஜெமினி கணேசனும் அவரது மனைவி சாவித்திரியும் மாயம்". தமிழகமெங்கும் இந்த செய்தி இன்னும் பரவலாகப் பேசப்பட்டது. தங்களுக்கு எதுவும் ஆகவில்லை தாங்கள் நலமாக இருப்பதாக ஊடகங்களின் வாயிலாக தகவல் அறியப்பட்டதுமே தமிழகம் அந்தப் பீதியில் இருந்து தெளிந்தது. இருந்தும் புயலின் தாக்கம் பற்றி இவர்கள் கூறிய கருத்துக்கள் தனுஷ்கோடி வரலாற்றில் மிக முக்கிய இடம் பிடிக்கின்றன.



டிசம்பர் 22 மாலை, ஜெமினியும் சாவித்திரியும் தனுஷ்கோடி கடலில் புனித நீராடிவிட்டு அவர்கள் தங்கியிருந்த அறைக்கு திரும்பும் பொழுதே காற்றின் வேகம் மிகவும் பலமாக இருந்தது. மழையும் விடாமல் பெய்து கொண்டிருந்தது. அன்றைய இரவுப் பொழுதை தனுஷ்கோடியில் வேண்டும் என்பது சாவித்திரியின் விருப்பம். விடாது அடித்த காற்றும் அடைமழை கொடுத்த எச்சரிக்கையும் ஜெமினியை தனுஷ்கோடியில் இருக்கச் சம்மதிக்கவில்லை. சாவித்திரி எவ்வளவோ கேட்டுக்கொண்டும் ஜெமினி கண்டிப்புடன் எச்சரிக்கவே அன்றைய மாலை ரயிலில் ராமேஸ்வரம் கிளம்பிச் சென்றுவிட்டனர்.

தனுஷ்கோடிக்கு முன்பே புயல் தலைமன்னாரை நெருங்கி இருந்தது. தலைமன்னாரும் பல ஆயிரம் உயிர்களை புயலுக்கு காவு கொடுத்திருந்தது. தலைமன்னார் கடலில் கலந்த உயிர்கள் தனுஷ்கோடி கரையில் உடலாக ஒதுங்கத் தொடங்கியிருந்தது.

புயலைப் பற்றி ஜெமினி மற்றும் சாவித்திரி பின்வருமாறு குறிபிடுகிறார்கள் :

"ஓயாம காத்து அடிச்சிட்டே இருந்தது. நிறைய நரி ஊளையிடற சத்தம் விடாம கேட்டுதே இருந்தது. புயல் காத்து அப்புறம் நரி ஊளையிடுற சத்தம், மழை எல்லாமே சேர்ந்து ஒருவித திகலாவே இருந்தது. சினிமால தான் இந்த மாதிரியான காட்சிகள் இருக்கும். அன்னைக்கு நைட் எங்களால தூங்கவே முடியல."

"அடுத்த நாள் காலைல தனுஷ்கோடி மக்கள் எல்லாரும் ராமேஸ்வரம் நோக்கி ஓடிவாறாங்க. அவங்க நிலமைய பார்த்தப்போ தான் புயலோட தீவிரம் முழுசா தெரிஞ்சது. அவங்க எல்லாரும் கையில பிணங்கள தூக்கிட்டு ஓடி வந்தாங்க. அந்தக் காட்சிய பாக்குறதுக்கே கொடூரமா இருந்தது." தங்கள் பேட்டியில் ஒருவித மிரட்சியுடன் அந்த காட்சியை விவரித்து இருகிறார்கள்.


ராமேஸ்வரம் ரயில்வே அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலை தங்களுக்காக பாம்பன் வரை முடியுமா என்று கேட்டுள்ளனர். இருந்த நிலகரிகள் அனைத்தும் புயல் மழையோடு சென்று விட்டதால் எரிபொருள் இல்லை என்று கூறி கையை விரித்துவிட்டனர் . அதன்பின் பேரிழப்பைப் பார்வையிட வந்த முதல்வரை சந்தித்து ஜெமினி தங்கள் நிலைமையை எடுத்துக் கூற அவரும் உதவி செய்வதாக கூறியுள்ளார். பின்பு ஒருவழியாக அவர்கள் பாம்பன் வந்து அங்கிருந்து மோட்டார் படகு மூலம் ராமநாதபுரம் வந்து பின் மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்துள்ளனர். ராமஸ்வரத்தில் இருந்து புறப்படுவதற்கு முன் தங்கள் கையிலிருந்த ஆயிரம் ரூபாயையும் அங்கிருந்த மக்களுக்காகக் கொடுத்துவிட்டுத் தான் வந்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில் தங்கியிருந்த ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரியைப் பார்ப்பதற்கு வந்திருந்த தனுஷ்கோடி மக்கள் புயலில் இருந்து தப்பித்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். அப்படித் தப்பித்தவர்களில் ஒருவர் கூறுகிறார் " அன்னிக்கு மட்டும் நான் ராமேஸ்வரம் போகாம இருந்திருந்தா என் பொண்டாட்டி புள்ளைங்கள காப்பாத்தி இருப்பேன், இல்ல அதுங்களோட சேர்ந்து ஒரேடியாப் போயிருப்பேன்" தன்னைச் சந்திக்கும் பலரிடமும் இந்த வார்த்தைகளையே கூறிக் கொண்டுள்ளார்.




அன்றைய தினம் காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல் இன்றுவரை கிடைக்கவில்லை. மணலில் புதைந்த பிணங்களும், கடலில் மிதந்த பிணங்களும் ஏராளம். அவற்றைத் தேடி எடுக்க மீட்புப் பணியினரால் முடியவில்லை. மேலும் பல உடல்கள் கழுகுகளாலும் மிருகங்களாலும் வேட்டையாடப்பட்டதால் அவர்களை இனங்கான முடியாமல் போயிற்று.

மக்கள் வாழ்வாதரங்களை இழந்த நிலையில் அரசு தனுஷ்கோடியை மக்கள் வாழத் தகுதியற்ற நகரம் என்று அறிவித்தது. தன்னுடைய அத்தனை அடையாளங்களையும் அன்றைய ஒருநாள் புயலில் மொத்தமாக இழந்தது தனுஷ்கோடி. ரயில்நிலையம், தபால்நிலையம், தந்தி ஆபீஸ், சுங்கச் சாவடி, மாநிலத்தின் முக்கியமான துறைமுகம் மற்றும் மீன்பிடி நிலையம் என்று தனது அன்றாட வாழ்கையை இழந்து மக்கள் வாழத் தகுதியற்ற என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

மூன்று மாதத்திற்கு முன்பு பார்த்த தனுஷ்கோடிக்கும் சமீபத்தில் பார்த்த தனுஷ்கோடிக்கும் பூகோள சுழற்சியின் காரணத்தால் நிறையவே மாற்றங்கள் இருந்தன. தனுஷ்கோடி மேல் ஈர்ப்பு வருவதற்கு இது போன்ற மாற்றங்களும் மிக முக்கியமான காரணிகள். முதன் முறை தனுஷ்கோடி வந்தபொழுது ராமேஸ்வரத்தை சேர்ந்த எனது நண்பன் சுந்தர் ராமனும் உடன் வந்திருந்தான். சுந்தர் தனுஷ்கோடி பற்றி கூறிய முக்கயமான விசயங்களைக் கூற வேண்டி இருப்பதால் அவனது வருகையை இங்கே பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது.



ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் பாதையில் அமைந்துள்ளது கோதண்டராமர் கோவில், ராவண வதத்திற்குப் பின் ராமர் விபீடணனுக்கு இங்கு வைத்து தான் பட்டாபிசேகம் செய்து வைத்துள்ளார். நான் கூற விளைவது அதுவல்ல. கோதண்டராமர் கோவிலைச் சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடற்கரை மணல் நிரம்பி இருக்கும். அந்த கோவிலில் தரிசனம் முடித்துத் திரும்பும் பொழுது சுந்தர் விசித்திரமாக ஒரு விஷயம் சொன்னான்.

"இப்ப இந்த இடம் எவ்ளோ காஞ்சு போய் இருக்கு, இன்னும் கொஞ்ச மாசத்துல இந்த இடம் முழுசும் கடல் உள்ள வந்தரும், இப்பவாது கோவிலுக்கு போறதுக்கு ரோடு போட்ருகாங்க, சின்ன வயசுல கடல் தண்ணி இருக்குற சமயம் கோவிலுக்கு போகவே முடியாது. ரொம்ப கஷ்டப்பட்டு தான் போவோம்".


இந்த வார்த்தைகளை சத்தியமாக நாங்கள் யாரும்  நம்பி விடவில்லை. இந்த முறை தனுஸ்கோடி சென்றிருக்கா விட்டால் நிச்சயமாக அவன் வார்த்தைகளை நம்பியும் இருக்க மாட்டேன், சுந்தர் ஏதோ கதை விடுவதாகத் தான் நினைத்திருப்பேன்.


மூன்று மாதத்திற்கு முன் சென்ற பொழுது  தனுஷ்கோடி செல்லும் வழியெல்லாம் மணல் நிரம்பிய  அழகான கடற்கரையைத் தான் காண முடிந்தது. கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் "கன்னத்தில் முத்தமிட்டால்" பாடலில் தனுஷ்கோடி கடற்கரை எவ்வளவு அழகாகக் காட்டியிருப்பர்களோ அத்துணை அழகாக இருந்தது. ஆனால்  இம்முறை செல்லும் பொழுதோ தலைகீழ் மாற்றம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் நீர் மட்டுமே காட்சியளித்தது. கடல்நீரைத் தொடர்ந்து கடல் காட்சியளித்தது. நான் அண்ணன் தம்பி மூவருமே இம்முறை அந்தக் காட்சியை வித்தியாசமாய்ப் பார்த்தோம், காரணம் எங்களைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் முதன்முறை அவ்வழியே பயணிக்கிறார்கள். சமீபத்தில் மழை பெய்திருந்ததால் அந்த மழை நீர் தான் தேங்கி இருக்க வேண்டும் என்று நினைத்தோம், பின்பு தான் தெரிந்து கொண்டோம், அது மழை நீர் இல்லை கடல் நீர் என்று. இதற்கான அறிவியல் பூர்வமான காரணத்தை சற்று தாமதித்துப் பாப்போம். அதற்கு முன் வேறு சில காட்சிகளைப் பார்த்துவிடுவோம்.

ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி பதினான்கு கி.மீ தொலைவில் உள்ளது. செல்லும் வழியில் வலப்புறம் வெகு அருகில் இந்தியப் பெருங்கடலையும், இடப்புறம் வங்கக் கடலையும் கொண்டுள்ளது. சீரும் இந்தியைப் பெருங்கடல் ஆண்கடலாகவும், பொறுமையாய் அலையற்றதாய் இருக்கும் வங்கக் கடலை பெண் கடலாகவும் குறிப்பிடுகிறார்கள்.

ராமேஸ்வரத்திற்கு நாங்கள் காரில் சென்றிருந்ததால் அதே காரிலேயே தனுஷ்கோடி முழுவதையும் சுற்றிப் பார்த்துவிடலாம் என்ற நப்பாசையில் தான் தனுஷ்கோடி செல்லும் வழியின் பாதி தூரம் வரை சென்றோம். மூன்று மாதத்திற்கு முன்பு இருந்த வழிகள் இன்று இல்லை, அவை கடல் நீருக்குள் ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளன. மேலும் அந்த வழியாக சென்றால் மட்டுமே இரு கடலும் சங்கமிக்கும் இடத்திற்கு செல்ல முடியும். சென்ற முறை தனுஷ்கோடியின் அழிவுச் சின்னங்களை பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருக்கவில்லை . இம்முறை அவற்றை கண்டிப்பாக பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் தான் களம் இறங்கியிருந்தோம். தனுஷ்கோடி செல்லும் பாதை முழுவதையும் கடல்நீர் தன் வசம் வைத்திருந்ததால் நாங்கள் சென்ற கார் அவ்வழி செல்ல முடியாது என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டது.


அந்த இடத்தில இருந்து தனுஷ்கோடி வரை செல்வதற்கு ஜீப் வேன் அல்லது டெம்போ வசதி உண்டு. வேன் மற்றும் டெம்போவில் நபருக்கு நூறு ருபாய் கட்டணம். அதிக கட்டணம் வசூலித்தால்புகார் அளிப்பதற்கு என்று  தொடர்பு எண்ணும் கொடுத்து இருகிறார்கள். குறைந்தது இருபது நபர் சேர்ந்தால் மட்டுமே வண்டியை நகற்றுகிறார்கள், இருபதிற்கும் மேல் ஆட்கள் சேர்ந்தால் சந்தோசத்துடன் வண்டியை சீறிக் கொண்டு கிளப்புகிறார்கள். தலைக்கு நூறு ரூபாய் கொடுத்து தனுஷ்கோடி செல்வதற்கு முதலில் எங்கள் குடும்பம் உடன்படவில்லை.சற்று யோசிக்கத தொடங்கியது. சிறிதும் யோசிக்கக் கூடாது இவ்வளவு தூரம் வந்துவிட்டு தனுஷ்கோடியைப் பார்க்கமால் போவதா என்று நான் கொடி பிடிக்கவே, மற்றுமொரு குடும்பத்தையும் ஏற்றிக்கொண்டு கிளம்பியது எங்கள் டெம்போ.

டெம்போ நிரம்பி வழிய,  சாகசங்களை விரும்பும் என் போன்ற ஐந்து பேர் சர்கஸில் கயிற்றைப் பிடித்துத் தொங்குவது போல டெம்போவில் பேக்போர்ட் (பூட்போர்ட்) அடிக்கத் தொடங்கினோம். கரணம் தப்பினால் மரணம் இல்லை குட்டிக்கரணம் மட்டுமே அடிக்க வேண்டியிருக்கும் அதுவும் பட்டு போன்ற மிருதுவனா மணலில் என்பதால் அடிபடும் வாய்ப்பு குறைவு. இருந்தும் நிலமும் நீரும் சங்கமிக்கும் இடம் வழியே டெம்போவானது அம்பாரி போல் ஆடி ஆடி செல்ல ஆரம்பித்த அதே நிமிடம் சுவாரசியமான சற்றே திகில் நிறைந்த எங்களது தனுஷ்கோடி பயணமும் ஆரம்பமாகியது.

கடற்கரை மணல் சூழ்ந்த பகுதிகள் அனைத்தும் கடல்நீரால் சூழப்பட்டு இருந்தது ஆச்சரியம் என்றால், சென்ற முறை ஆர்பரித்துக் கொண்டிருந்த இந்தியப் பெருங்கடலோ இம்முறை குறைவான அலைகளுடன் அமைதி காத்துக் கொண்டிருந்தது. டெம்போவின் நடத்துனரிடம்(!) இருந்து என் புலன் விசாரணை தொடங்கியது.



இந்தியப் பெருங்கடலில் காற்றடிக்கும் ஆறு மாத காலமும்  இந்தியப் பெருங்கடலானது  ஆக்ரோசமாகவும், வங்காளவிரிகுடா அமைதியானதாகவும் இருக்கும், வங்காள விரிகுடாவில் காற்றடிக்கும் பொழுது அகன்ற நீளமான அந்தக் கடற்கரை முழுவதுமே கடல் நீர் கொண்டு நிரப்பட்டு இருக்கும். இந்தக் காலங்களில் வங்காள விரிகுடாவிலும் அலையின் வேகம் சற்றே அதிகமாய் இருக்கும். மேலும் கடற்கரை நீரால் சூழப்பட்டு இருக்கும் இது போன்ற காலங்களில், இரு கடலும் சங்கமிக்கும் இடத்திற்கு நம்மால் செல்ல முடியாது. (முதல்முறை சென்ற பொழுது இருகடல்கள் சங்கமிக்கும் இடத்திற்கு சென்ற பாக்கியவான்கள் ஆனோம் என்பது குறிப்பிடத்தக்கது).

மூன்று கி.மீ பயணம் தான், ஆனால் அதைக் கடக்கவே கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் ஆகியது. புதிதாக பரவி இருந்த கடல் நீர், வழித்தடம் அனைத்தையும் இல்லமால் செய்திருந்தது. இருந்தும் பல வருடங்களாக வண்டி ஓட்டும் ஜாம்பவான்கள் என்பதால் தங்களுக்கான பாதையை லாவகமாக ஏற்படுத்திக் கொண்டு முன்னேறிச் செல்கிறார்கள். மணலுக்குள் புதைந்து உருளும் சக்கரங்கள் சில சமயங்களில் எப்போது வேண்டுமானாலும் நம்மை கவிழ்த்தி விடலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கொண்டே இருந்தன. நம் வாகனம் செல்லும் தடத்தின் எதிரில் ஏதேனும் வாகனம் வந்தால் டிரைவரின் நிலைமை கொஞ்சம் தான். கிரைண்டரில் புதிதாக போட்ட அரிசியை அரைப்பதற்கு கஷ்டப்படும் ஆட்டுக்கல்லை போல் ஸ்டியரிங்கை சுற்றி சுற்றி வளைத்து  தனக்கான புதிய தடத்தைப் பதித்து முன்னேறிச் செல்ல வேண்டும். உள்ளிருக்கும் நமக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவம் என்றாலும் வண்டி ஓட்டும் மனிதர்களுக்கு அது தான் வாழ்க்கை.

பெரும்பாலான நேரங்களில் டெம்போவின் ஒரு பகுதி சக்கரங்கள் நீருக்குள் அமிழ்ந்து போன மணலுக்குள் தான் தான் உருளுகின்றன, எப்போது வேண்டுமானுலும் கவிழ்ந்து விடலாம் என்கிற அச்சத்திலேயே சக்கரங்கள் நம்மை தனுஷ்கோடி வரை கொண்டு செல்கின்றன. இந்த டெம்போ பயணம் நிச்சயமாக ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

தனுஷ்கோடி பூர்வகுடி மக்களுக்கு  இது போன்ற டெம்போக்களும் வேன்களும் மட்டுமே போக்குவரத்து காரணிகள், இவர்களிடம் பத்திலிருந்து இருபது ரூபாய் வரை வரை பெற்றுக்கொண்டு அழைத்துச் செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் வராத காலங்களில் எந்தவிதமான வாகனப் போக்குவரத்தும் நடைபெறாது. தனுஷ்கோடி நடந்தே செல்ல வேண்டும். இங்கு ஒரு சிறிய பள்ளிக் கூடம் ஒன்றும் உள்ளது, தனுஷ்கோடி வாழ் மீனவர்களின் குழந்தைகள் மட்டுமே இங்கு படிகிறார்கள். ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் தினமும் வந்து செல்கிறார், வாகனங்கள் இல்லா நாட்களில் நடந்தே வந்து செல்கிறார். அவசர சிகிச்சை, பிரசவ காலங்கள் என்று எதுவாக இருந்தாலும் விடிந்ததும் தான் இவர்களால் ராமேஸ்வரம் செல்ல முடியும். திடிரென்று புயல் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டால் கூட நடந்து தான் ராமேஸ்வரம் வரவேண்டி இருக்கும் என்பது மற்றுமொரு கொடுமையான விஷயம்.



தனுஷ்கோடியின் ஒரு இடிந்த கட்டிட தரைமட்டதின் மேல் டெம்போ நின்றது, எங்களுக்கு முன் சென்ற வாகனங்களும் இனி வரப் போகும் வாகனங்களும் இங்கு தான் நிற்கும். ஒரு காலத்தில் தனுஷ்கோடி வரும் ரயில்கள் நிற்கும் அதே இடத்தில இன்று டெம்போக்கள் வந்து நம்மை இறக்குகின்றன, புயலால் கொண்டு செல்லப்பட்ட ரயில்நிலையத்தின் மிச்சம் தான் தற்போது இந்த டெம்போக்கள் இளைப்பாறிக் கொண்டிருக்கும் இடம். நகரத்தின் மீது நம் காலடி படும் முதல் இடமான இந்த ரயில் நிலையமே நம்முள் இனம் புரியாத ஏதோ ஒரு வித உணர்வை ஏற்படுத்துகிறது.

ரயில் நிலையத்தின் மிக அருகில் புயலில் இருந்து தப்பிப் பிழைத்த ஒரு முனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் பூசாரி எங்களிடம் பல விசயங்களைப் பகிர்ந்து கொண்டார். எந்தக் காலத்திலோ தினமணி பேப்பர் தனுஷ்கோடி பற்றி அச்சிட்ட செய்திகளை இன்றும் மிகப்பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார். தனுஷ்கோடியின் பழைய கதைகளைக் கேட்பவர்களிடம் எல்லாம் சளைக்காமல் பதில் கூறுகிறார், தன்னிடம் இருக்கும்  நாளிதழையும் காண்பிகிறார். முனீஸ்வரன் கோவிலுக்கு பின்புறமாக அவர் கைகாட்டிய திசையில் துறைமுகம் இருந்ததாகக் கூறுகிறார், அவரது தாத்தா அங்கு வேலை செய்ததை அத்தனை பெருமையாகக் குறிபிடுகிறார்.  புயல் அடித்த தினத்தன்று பெரும்பாலான அவரது சொந்தங்கள் காணாமல் போய்விட்டார்கள் என்பதையும் குறிப்பிட அவர் மறக்கவில்லை.



மக்கள் வாழத் தகுதியற்ற என்று முத்திரை குத்தப்பட்ட தனுஷ்கோடியில் இன்று இருநூறு குடும்பங்கள் வரை வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு மின் இணைப்பு கிடையாது. இவர்களது இரவும் பகலும் மின்சாரம் இல்லாமல் தான் கழிகிறது, கருக்கல் நேரங்களில் சிமினி விளக்குகள் மட்டுமே தனுஷ்கோடிக்கு வெளிச்சம் தருகின்றன. "ராமேஸ்வரத்துக்கு போனா தான் நாங்க லைட்ட பாக்க முடியும்" என்றார் என்னுடன் உரையாடிய ஒரு பெரியவர். சிலரிடம் ரேடியோ இருக்கின்றன, சிலரிடம் மொபைல் இருக்கிறது, சிக்னல் கிடைப்பது இல்லை, பாடல் கேட்கும் சாதனமாக அதைப் பயன்படுத்துகிறார்கள்.

அடிப்படை வசதி என்று எதுவும் கிடையாது, கடற்கரை மணலில் சில அடி ஆழத்தில் நன்னீர் ஊற்றுகள் இருக்கின்றன, இந்த நீரூற்றுக்கள் தான் இவர்களது நீர் ஆதாரம். சமையல் பொருட்கள் அனைத்தையும் ராமேஸ்வரத்தில் இருந்தே வாங்கி வருகிறார்கள். இங்கு இருப்பவர்கள் அனைவரும் காலங்காலமாக தனுஷ்கோடியில் வாழ்ந்து வரும் மீனவர்கள். மீன்பிடி தொழில் போக கடல் சிப்பிகளைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்தும் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இந்த இடத்தைவிட்டு செல்ல இவர்களுக்கு மனம் இடங்கொடா காரணத்தால் இங்கேயே தங்கி விட்டனர். வெளியிடத்து மக்கள் பெண் எடுக்கவும் கொடுக்கவும் அச்சப்படுவதால் திருமணங்கள் கூட தனுஷ்கோடிக்கு உள்ளேயே நடக்கின்றன.



சுற்றுல்லாத் தலமாக்கவும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதிலும் மற்றுமொரு புயல் தாக்கி இதைவிட இன்னும் மோசமான அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக்கூடாது என்று அரசாங்கம் பயப்படுவதால் தனுஷ்கோடியின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவே இருக்கிறது.

வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தனுஷ்கோடி சென்று வாருங்கள் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான பயணமாக தனுஷ்கோடி இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

முதல்முறையாக ஒரு தொடரை முழுமையாக நிறைவு செய்வதற்கு ஊக்கம் அளித்த அத்தனை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Wednesday, December 3, 2014

சீனுகுரு எழுதும் தனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் 1

தனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1


தனுஷ்கோடி இந்த பெயரும் பெயர்சார்ந்த இடமும் மீது எப்போது ஏன்எதற்கு எப்படி ஈர்ப்பு வந்தது என்றுதெரியவில்லை. சற்றே அமானுஷ்யம்பரவிய மணற்பரப்பு, ஓயாமல்அடித்துக் கொண்டு இருக்கும் கடல்காற்று. ஒரு புறம் சாதுவான வங்கக்கடலையும், மறுபுறம் ஆற்பரிக்கும்இந்தியப் பெருங்கடலையும்தனக்கான எல்லைகளாகவரையறுத்துக் கொண்டு அழிந்தும் அழியாமலும் சோகங்களை, தொலைந்துபோன ஆன்மாக்களைத் தேடி நிற்கிறது தனுஷ்கோடி. தனுஷ்கோடி சென்று வந்தகதையை பயணக் கட்டுரையாக மட்டும் எழுதலாம் என்று நினைத்திருந்தேன்.ஆனால் வரலாறுக்குள் புதைந்து எஞ்சியிருக்கும் மணல்பரப்பும், மிஞ்சிஇருக்கும் மக்களும் அந்த எண்ணத்தை மாற்றி விட்டனர். 


புயலால் அழிந்து போன தனுஷ்கோடி மீதான தேடல் தொடங்கிய நிமிடம் முதல்இந்த நிமிடம் வரை தனுஷ்கோடி பற்றி கிடைத்து வரும் தகவல்கள் அனைத்தும்சற்றே பிரமிப்பாயும் திகில் கலந்தும் உள்ளது. பயணத்தில் சந்தித்ததனுஷ்கோடி மக்கள் மூலம் கிடைத்த தவல்களும், இணையத்தில் தனுஷ்கோடிபற்றிய தேடல் மூலம் கிடைத்த தகவல்களுமாக இணைந்து இந்த பதிவுமுழுவடிவம் பெறுகிறது. இதற்கு முன் நான் எழுதிய எந்த ஒரு பதிவிற்கும்இவ்வளவு தேடல் மேற்கொண்டது இல்லை அவை எல்லாமே அனுபவப்பதிவுகளாக மட்டுமே இருக்கும், முதல் முறை சற்றே சிரத்தை எடுத்துதகவல்கள் சேகரித்து இந்தப் பதிவை எழுதுகிறேன். அதற்கு முழு காரணமும்தனுஷ்கோடி தான்.




தனுஷ்கோடி பற்றி இணையத்தில் தேடிய பொழுது பல தகவல்கள் கிடைத்ததுஇருந்தும் நான் தேடிய தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கவில்லை,ஆங்காங்கு கிடைத்த தகவல்களை மொத்தமாக ஒரே இடத்திலதொகுத்துள்ளேன். இருந்தும் நூறு சதவீதம் முழுமையான தகவல்கள் அடங்கியபதிவாக இருக்காது. இந்தப் பதிவை படிக்கும் உங்களிடம் நான் வைக்கும்வேண்டுகோள் இரண்டு, எங்கேனும் தவறு செய்திருந்தால் திருந்துங்கள்,காரணம் வரலாற்றைப் பிழையாக்கி விடக்கூடாது, ஏதேனும் தகவல்விடுபட்டிருந்தால், பின்னூட்டத்தில் தெரிவியுங்கள், தொடர்புள்ள சுட்டிகொடுங்கள், பதிவுடன் இணைத்துக் கொள்கிறேன். 

குறைந்த கால இடைவெளிக்குள் இரண்டு முறை தனுஷ்கோடி சென்றுவருவேன் என்று நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை. மூன்று மாதங்களுக்குமுன்பு நண்பர்களுடன் ராமேஸ்வரம் தனுஷ்கோடி சென்று வந்த பயணக் கதைஎங்கள் குடும்பத்தாருக்கு ஆர்வத்தை அத்துமீறி கிளப்பி இருக்க வேண்டும்.அதனால் நாள் தான் என்னவோ முதல் நாள் இரவு ஆலோசித்து அடுத்த நாள்பயணித்தும் விட்டோம். இம்முறை தென்காசியில் இருந்து ராமேஸ்வரம்நோக்கி பயணித்தோம். ஆறுமணி நேரப் பயணம், ராமேஸ்வரம் தீர்த்தங்களில்நீராடிவிட்டு தனுஷ்கோடி நோக்கிய பயணம் தொடங்கியது. (ராமேஸ்வரம்பற்றிய விரிவான பதிவை படிக்க இங்கு சுட்டுங்கள்). 

தன்னிலை விளக்கம் சற்றே நீண்டமைக்குப் பொறுத்தருள்க. தாமதியாமல்நாடோடி எக்ஸ்பிரஸினுள் ஏறிக்கொள்ளுங்கள், தனுஷ்கோடி நோக்கிய நமதுபயணத்தை, வரலாற்றுத் தேடலைத் தொடங்குவோம்.




நாம் பயணித்துக் கொண்டிருக்கும் காலம் 1964 டிசம்பர் 22. நாம் பயணிக்கும்நேரம், இருள் இருள், இருள் மட்டுமே பரவி இருந்த இரவு நேரம். கடந்த சிலநாட்களாக பெய்திருந்த பேய் மழையில் தென்தமிழகத்தின் கடற்கரையோரப்பகுதிகள் முழுவதும் தொப்பலாக நனைந்திருந்தன. மிகப்பெரும் மழைக்குப்பின்னான சிறு தூறல்கள் பாம்பன் ரயில் நிலையத்தைக் குளிர்வித்துக்கொண்டிருந்ததன. தனுஷ்கோடி செல்லும் கடைசி ரயிலான பாம்பன்-தனுஷ்கோடி பாசன்ஜர் 110 பயணிகளையும், 5 ரயில்வே அதிகாரிகளையும்சுமந்து கொண்டு புறப்படத் தயாராக இருந்தது. ஏழு பெட்டிகள்கோர்க்கப்பட்டிருந்த ரயிலில் 40 வட இந்தியக் கல்லூரி மாணவர்களும்,துறவிகளும், யாத்ரீகர்களும், உள்ளூர்ப் பயணிகளும் இருந்தனர்.

டிசம்பர் 17ம் தேதியே வங்காள விரிகுடாவின் அந்தமான் பகுதியில் குறைந்தகாற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி இருந்தது, அந்த காற்றழுத்தம் கொஞ்சம்கொஞ்சமாக வலுபெற்று 19ம் தேதி புயல் சினமாக வலுகொண்டது. எப்போதுவேண்டுமானாலும் புயல் தாக்கலாம் என்ற நிலையில் தான் வங்களா விரிகுடாமற்றும் இந்தியப் பெருங்கடலின் பெரும்பாலான கடற்கரை ஓரங்கள் இருந்தன.காரணம் புயல் கொஞ்சம் கொஞ்சமாக தெற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்ததுதுரதிஷ்டவசமாக மக்கள் அதிகம் வாழும் மிக முக்கியமானபகுதிகளான இலங்கையின் வவுனியா வழியாக தலைமன்னாரையும்தனுஷ்கோடியையும் சேதப்படுத்தும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். புயல் அந்தமானில் இருந்து மன்னார் வளைகுடாவை வெகுவாகநெருங்கிய நேரம், பாம்பனில் இருந்து ரயில் மெதுவாக தனுஷ்கோடி நோக்கிநகரத் தொடங்கியது. புயல் கரையைக் கடக்கும் முன் தனுஷ்கோடியைப் பற்றியவரலாற்றுப் பார்வை ஒன்றைப் பார்த்து விடுவோம். 


தனுஷ்கோடி தமிழகத்தின் மிக முக்கியமான வர்த்தக நகரம். சென்னைதூத்துக்குடிக்குப் பின் மிக முக்கியமான துறைமுக நகரமாகவும் விளங்கியது.பிரிட்டிஷ் அரசு, இந்தியாவையும் இலங்கையையும் ஒருசேர ஆண்டுகொண்டிருந்த 18 - 20 ம் நூற்றாண்டுகளில் கப்பல் போக்குவரத்து மூலம்வியாபாரமும் செழிப்பாக நடந்து கொண்டிருந்தது. 




1911ம் ஆண்டு பிரிட்ஷ் அரசு தனுஷ்கோடியிலும் தலைமன்னாரிலும் ஒரேபோன்ற துறைமுகக் கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டி மூன்றே வருடங்களில்(1914) கப்பல் போக்குவரத்தையும் தொடங்கிவிட்டார்கள். இர்வின், போஷின்என்ற பெயருடைய இந்த இரண்டு நீராவிக் கப்பல்களும் இந்தத் துறைமுகத்தில்இருந்து தான் தங்கள் பயணத்தைத் தொடங்கின. கப்பல் போக்குவரத்துநடைபெற்ற காலத்தில் ஒரு நாளைக்கு ஆறு ரயில்கள் வரை தனுஷ்கோடிசென்று வந்து கொண்டிருந்தன. 

சென்னை எக்மோரில் இருந்து ஒரு நாளைக்கு இரண்டு ரயில்கள் தனுஷ்கோடிவரை சென்று வந்தன. இந்தோ-சிலோன் போட் மெயில் (BOAT MAIL) என்றுஅழைக்கப்பட்ட இந்த ரயிலின் சிறப்பம்சமே இந்தியாவையும் இலங்கையையும்இணைத்தது தான். எண்பது ருபாய் கட்டணத்தில் டிக்கெட் எடுத்தால்சென்னையில் இருந்து கொழும்பு வரை சென்று விடலாம். 




சென்னையில் இருந்து தனுஷ்கோடி துறைமுகம் வரை ரயில் பயணம்,தனுஷ்கோடி துறைமுகத்தில் தயாராக இருக்கும் நீராவிக் கப்பலில் ஏறினால்அங்கிருந்து தலைமனார் துறைமுகம் வரை கப்பல் பயணம். தலைமன்னாரில்இருந்து கொழும்பு வரை மீண்டும் ரயில் பயணம். இந்தியாவையும்கொழும்புவையும் இணைத்த இந்த போட் மெயில் மூலம் தான் பெரும்பாலானஇந்தியர்கள் வர்த்தகம் மேற்கொண்டனர். இந்தக் கால கட்டங்களில் வியாபாரம்நிமித்தமாக தமிழகத்தில் இருந்து இலங்கை சென்று குடியமர்ந்த தமிழர்கள்மலையக தமிழர்கள் என்று அறியப்படுகிறார்கள். 

இந்திய சுதந்திரத்திற்குப் பின்னும் சுதந்திரமாக பயணித்துக் கொண்டிருந்த இந்தரயில்வழிபோக்குவரத்து 1964 புயலுக்குப் பின் முடிவுக்கு வந்தது. அதன் பின் இந்தரயில் தற்போது சேது எக்ஸ்பிரஸாக பயணித்து வருகிறது. இர்வினும்போஷினும் தங்கள் பயணத்தை கணித மேதை ராமனுஜம் பெயரில் தொடர்ந்துகொண்டிருந்தன. 1984ல் ஏற்பட்ட இனப் போராட்டம் மூலம் நீர்வழி சேவையும்முடிவுக்கு வந்தது. 




தனுஷ்கோடி கடலில் குளித்தால் காசி தீர்த்தத்தில் நீராடியதற்கு சமம் என்றொருநம்பிக்கை உண்டு, மேலும் காசி புனித யாத்திரையை ராமேஸ்வரத்தில் நிறைவுசெய்ய வேண்டும் என்ற நம்பிக்கையும் உண்டு, அதனால் வாரனாசியில் இருந்துதனுஷ்கோடிக்கு வாரம் இருமுறை இரயில்கள் வந்து செல்லும். மேலும்பாம்பனில் இருந்து தனுஷ்கோடிக்கு பாசன்ஜர் ரயிலும் உண்டு. பாம்பனில்இருந்து தனுஷ்கோடி செல்ல முதலில் ராமேஸ்வரம் வழியாகத் தான் ரயில்பாதையை அமைத்திருந்தனர். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும்பாதை இந்தியப் பெருங்கடலின் கடற்கரையோரம் அமைந்திருந்தது.சாதாரணமாகவே இந்தியப் பெருங்கடலில் காற்றின் வேகம் மிக அதிகம். இந்தக்காற்றானது அடிகடி இரயிலின் வழித்தடத்தை கடல் மணல் கொண்டுமூடிவிடுவதால் அடிக்கடி ரயில் போக்குவரத்து தடைபடுவது உண்டு. 

இதற்கு மாற்று ஏற்பாடாக பாம்பனில் இருந்து தனுஷ்கோடி செல்லும் ரயில்பாதையை குந்துக்கல் என்ற இடம் வழியாக மாற்றி அமைத்தார்கள். மேலும்குந்துகல்லில் இருந்து ராமேஸ்வரம் செல்வதற்கு இணைப்பு ரயில் உண்டு. 

ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பற்றி புயலுக்கு முன் பயலுக்குப் பின் என்றுபார்தோமானால் ராமேஸ்வரம் இராமன் வழிபட்ட தீர்த்தத் ஸ்தலம் மட்டுமேசொல்லிக் கொள்ளும்படியான வளர்ச்சி எதுவும் அடைந்திருக்கவில்லை.தனுஷ்கோடியோ துறவிகளும் யாத்ரீகர்களும் வியாபாரிகளும்வெளிநாட்டவர்களும் வந்து செல்கின்ற மிகவும் பரபரப்பான ஒரு நகரம்.மிகப்பெரிய ரயில் நிலையம், தபால் நிலையம், தந்தி ஆபீஸ், கஸ்டம்ஸ் ஆபீஸ்,மேல்நிலைப் பள்ளி, மாநிலத்தின் மிக முக்கியமான துறைமுகம் என்றுபரபரப்பாக இயங்குகின்ற மிக முக்கியமான வர்த்தக நகரம். மீன் கருவாடு உப்புஒப்ன்றவை மிக முக்கியமான ஏற்றுமதிப் பொருட்கள். மேலும் இந்தியாவில்இருந்து இலங்கை சென்று வர விசா தேவை இல்லை என்பதால் மக்கள்போக்குவரத்தும் அதிகம். 



டிசம்பர் 22 1964, தனுஷ்கோடியின் அன்றைய தினம் தொடக்கம் முதலே  வழக்கத்தை விட அதிகமான காற்றையும் மழையையும் எதிர்கொண்டிருந்தது. கடலுக்குள் செல்வதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்க வில்லை. வங்கக் கடலில் தோன்றிய புயல் எங்கு எப்போது எங்கு கரையைக் கடக்கப் போகிறது என்பது பற்றியும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை புயல் மையம் கொண்டுள்ளது, காற்றடிக்கும் மழை பெய்யும் கடலுக்குள் செல்லக் கூடாது என்றளவில் மட்டுமே விழிப்புணர்வு இருந்தது. புயல் எச்சரிக்கை என்பது தெரியும் ஆனால் புயல் எங்கு கரையைக் கடக்கப் போகிறது என்பதை எல்லாம் அறிந்து கொள்ளும் வசதி அந்நாளில் இல்லை. புயலின் தீவிரம் இந்த அளவிற்கு இருக்கும் என்பது புயல் கரையைக் கடந்த பின் மட்டுமே தெரிந்தது.  


ட்ரைன் நம்பர் 653, பாம்பனில் இருந்து தனுஷ்கோடி வரை செல்லும் தனுஷ்கோடி - பாம்பன் பாசன்ஜெர் சரியாக 11.55க்கு தனுஷ்கோடி நோக்கிய தனது (இறுதி) யாத்திரையைத் தொடங்கியது. ரயில் தனுஷ்கோடியை நெருங்கும் சில நூறு மீட்டர்களுக்கு முன்,  காற்றின் வேகம் தீவிரம் அடைந்து, கடல் கொந்தளிக்கத் தொடங்கி இருந்தது. இஞ்சின் டிரைவர் ரயில்வே சிக்னல் வேலை செய்யவில்லை என்பதை அப்போதுதான் கவனித்து இருந்தார், தனுஷ்கோடியை புயல் தாக்கத் தொடங்கி இருந்ததால் அணைத்து தொடர்பு சாதனங்களும் செயல் இழந்து இருந்தன. ரயில்வே சிக்னல், தந்தி கம்பங்கள் என எதுவும் வேலை செய்யவில்லை. டிரைவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பலத்த மழையின் காரணமாக சிக்னல் செயல் இழந்து இருக்கும் என்று கணிக்கத் தெரிந்தவருக்கு வரப்போகும் அபாயத்தைப் கணிக்கத் தெரியவில்லை. 


எங்கும் இருள் சூழ்ந்து இருக்கவே ரயில் வருவதை தெரிவிக்க தன்னிடம் இருந்த விசிலை ஊதிக் கொண்டே வண்டியை நகற்ற ஆரம்பித்தார். அந்த நிமிடம், அந்த நொடி, அந்த 115 பேரும் என்ன மனநிலையில் இருந்திருப்பார்கள் என்று ஊகித்துக் நீங்களே கொள்ளுங்கள்.  ஆழிப் பெருங்காற்றும் அதைத் தொடர்ந்த பேரலையும் இரயிலை வாரி அணைத்துக் கொண்டது. இரயிலில் பயணித்த அத்தனை பயணிகளும் ஜலசமாதி ஆயினர். ரயில் நிலையத்திற்கும் ரயிலுக்குமான சில நூறு மீட்டர் இடைவெளிகளில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்து விட்டது. ஒரு சில நிமிடங்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்குமானால் அந்த பாசன்ஜெர், ரயில் நிலையத்தை அடைந்திருக்கும், அத்தனை உயிர்களும் மிகப் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டிருக்கும். விதி சற்றே வலியது அதனால் தானோ என்னவோ அவர்கள் உயிர் பிழைக்க வழி கொடுக்காமல் தன்னுடன் அழைத்துக் கொண்டது.     


தனுஷ்கோடியிலோ நிலைமை இன்னும் பரிதாபம், மின்கம்பங்கள் அறுந்து ஊரே இருளில் மூழ்கியது. கட்டிடங்களின் கூரைகள் பிய்த்துக் கொண்டு பறக்கத் தொடங்கின  அவசரகால தகவல் தொடர்புச் சாதனமான தந்திக் கம்பங்களும் அறுந்து தொங்கின, இன்ன நடக்கிறது என்று தகவல் சொல்லக் கூட அங்கிருந்தவர்களுக்கு வழி இல்லமால் போனது. கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்பி ஒரு ஊரையே மிரட்டிக் கொண்டிருந்தன. நடுநிசியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பலராலும் ஆழிக்காற்றின் வேகத்தை உணர முடியவில்லை. உறக்கத்தில் உயிரைத் தொலைத்தவர்கள் அநேகம் பேர். 


இருந்தும் அதிகரித்த காற்றின் வேகமும், அலைகள் மூலம் ஊருக்குள் புகுந்த தண்ணீரும் வரப் போகும் அசம்பாவிதத்தை எடுத்தியம்பத் தொடங்கின. இயற்கை கொடுந்த இந்த அபாய அறிவிப்பை உணர்ந்து கொண்டவர்கள் வேகமாக செயல் படத்தொடங்கினார்கள். அங்கு குடியிருந்த மக்களில் பெரும்பாலனவர்கள் மீனவர்கள் என்பதால் குழந்தைகள் பெண்களை சுமந்து கொண்டு பாதுகாப்பான இடம் தேடி நகரத் தொடங்கினார்கள். இதில் நீச்சல் காளி என்னும் மீனவர் மட்டும் தனியொரு ஆளாக பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார்.    

                   நீச்சல் காளி

அடைமழையில் அவர்களுக்கு கிடைத்த ஒரே ஒரு பாதுகாப்பான இடம் உயர்ந்த மணற்குன்றுகள் மட்டுமே. அதைத் தவிர அவர்களுக்கு வேறுவழி  இல்லை உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கு தான் நின்றாக வேண்டும். இதைத் தவிர இன்னுமொரு முக்கியமான இடமும் சில நூறு உயிர்களைக் காப்பாற்றியது.


ஒரு ரயில் ஒருநூறு உயிர்களைக் காவு வாங்கியது, மறுபுறம் ஒரு ரயில் சில நூறு உயிர்களைக் காவல்காத்தது . ஆம் பெரும்பாலான மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தேடி ஓடிய இடம் தனுஷ்கோடி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலைத் தான். மொத்த மக்கள் கூட்டமும் ரயிலை நிரப்பி கதவு ஜன்னல்களை இருக்க மூடிக் கொண்டது. 




ஊர் முழுவதும் வெள்ளமும் சோகமும் ஒரு சேர பரவத் தொடங்கி இருந்தது. தங்கள் குழந்தையை, துணையை, உறவினரைத் தேடத் தொடங்கியது. தங்கள் உயிர் காப்பாற்றப்பட்டது என்ற மகிழ்ச்சியை விட தொலைந்து போன உயிர்கள் பற்றிய பயமும் சோகமும் அவர்களை வாட்டியது. எதிர்பாரா சம்பவங்கள் அவர்களை குழப்பத்தில் தள்ளியது. கூச்சலும் குழப்பமும் நிறைந்த தனுஷ்கோடி தன்னுடைய ஒட்டுமொத்த ஆர்பரிப்பையும் அந்த ஒரு இரவில் வெளிப்படுத்தி அடங்கியது. 


இவை எதுபற்றியுமே அறியாமல் தமிழகம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது. அடுத்த நாள் பொழுதுபுலர்ந்த பொழுது கூட தனுஷ்கோடியின் நிலைமை குறித்து ஒருவரும் முழுவதுமாக அறிந்திருக்கவில்லை. அந்த நாட்களில் ராமேஸ்வரம் செல்வதற்கு தரைப்பாலம் கிடையாது, படகுப் போக்குவரத்தும், ரயில் சேவையும் மட்டுமே போக்குவரத்துக் காரணிகள். மற்றுமொரு கொடுமையான விஷயம் குடிநீரும் உணவுப் பொருட்களும் தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள் மூலமாக மட்டுமே கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். புயல் பாம்பன் பாலத்தையும் பதம் பார்த்திருந்தது, தண்டவாளங்கள் அறுந்து தொங்கிக் கொண்டிருந்தன. ஒட்டு மொத்த தனுஷ்கோடியும் எவ்வித தொடார்பும் இன்றி தனித்து விடப்பட்டிருந்தது. குடிக்கும் நீருக்குக் கூட வழியில்லாத ஆழி சூழ் உலகாக மாறி இருந்தது தனுஷ்கோடி.    


விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக பரவத் தொடங்கியது. தமிழக அரசாங்கம் விழித்துக் கொண்டது. அன்றைய முதல்வர் பக்தவத்சலம் உடனடியாக செயல்படத் தொடங்கினார். இந்தியாவின் உதவியை நாடினார். நிலைமையைப் புரிந்து கொண்ட இந்திய அரசும் போர்கால அடிப்படையில் செயல்படத் தொடங்கியது. தனுஷ்கோடி துயரச் சம்பவத்தை தேசியப் பேரிழப்பு என்று அறிவித்தது. இராணுவம் தொடங்கி முப்படைகளும் தனுஷ்கோடி நோக்கி விரைந்தன. முதல் தேவை நீரும் உணவும். வான்படையின் ஹெலிகாப்டர்கள் மூலமாக உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. இந்தியக் கப்பல் படையின் மீட்புக் குழுவும் களத்தில் இறங்கியது. 


அடுத்த நாளும் மழை நின்றபாடில்லை. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது. காப்பாற்றப்பட்ட மக்களை விட கண்டெடுத்த சடலங்களே அதிகம் என்று மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். எஞ்சிய தனுஷ்கோடியை "சாரதா" என்னும் கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல விரைந்தது. உயிர் பிழைத்த மக்கள்அனைவரையும் மதுரை அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதித்த பின்னும் கூட அரசாங்கத்தால் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியவில்லை. 




மூன்றாம் நாள் தான் அரசாங்கத்திற்கு நினைவு வந்தது, ஒரு பயணிகள் ரயிலைக் காணவில்லை என்று. மீண்டும் தேடல் தொடங்கியது. இறுதியாக முடிவுக்கு வந்தனர். புயலில் இரயில் கடலோடு கடலாக கலந்திருக்க வேண்டுமென்று. கடலுக்குள் இறங்கித் தேடத் தொடங்கினர், இரயிலின் பெரும்பாலான பாகங்கள் அதாவது இரும்பு தவிர்த்து மற்றவை அனைத்தும் கடலோடு கடலாக அடித்துச் செல்லப் பட்டுவிட்டது. அதில் பயணித்த 115பயணிகளும் மாண்டுவிட்டதாக அறிவித்தனர். பேரழிவைப் பார்வையிட வந்த முதல்வர் பக்தவத்சலம் தன்னால் ரயிலின் சில பாகங்களைக் காண முடிந்தது என்று குறிப்பிடுகிறார். 


தனுஷ்கோடியில் வெள்ளம் வடிய நான்கு நாட்களுக்கு மேல் ஆகியது. இந்தியாவை நிலை குலைய வைத்த சம்பவம் பற்றி உலகமே பரபரப்பாகப் பேசத் தொடங்கியது.      


சமீபத்தில் ஆந்திரா மற்றும் ஒரிசாவில் தாகிய புயல் பல ஆயிரம் மக்களை பலி வாங்கியது. அதனுடன் ஒப்பிடும் பொழுது தனுத்கொடியில் உயிரிழப்புகள் குறைவு தான் என்ற போதிலும் அடித்த புயலின் வேகம் மிக அதிகம். தலைமன்னரைக் கடக்கும் பொழுது மணிக்கு 150 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயல், தனுஷ்கோடியை தாக்கும் பொழுது மணிக்கு 250 கி.மீ வேகத்தில் தாக்கியுள்ளது. விளைவு 1500 மக்களின் உயிரைக் குடித்தது. 1500 ஏக்கருக்கும் மேலானா நிலப்பரப்பை நீருக்குள் இழுத்துக் கொண்டது. சொல்லப் போனால் மூன்று முழு கிராமங்கள் இன்றும் கடலடியில் தான் இளைப்பாறிக் கொண்டுள்ளன, தனுஷ்கோடி துறைமுகத்தையும் சேர்த்து.  




ஆசியாவின் இருபதாம் நூற்றாண்டுப் பேரிழப்பாக ஐ.நா சபை இந்த சம்பவத்தை அறிவித்தது. நிலமை இப்படி இருக்க தமிழகமோ  புயலில் சிக்கிய ஒரு சினிமா நடிகர் குறித்துக் கவலை கொள்ளத் தொடங்கியது. அது பற்றியும் தனுஷ்கோடி புயல் ஏற்படுத்திய விளைவுகளையும், இன்றைய தனுஷ்கோடியின் நிலமையைப்  பற்றி அடுத்த பதிவில் பகிர்கின்றேன். 


பயணிப்போம்... 


தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...

பாம்பன் பாலம்

பாம்பன் பாலம்

பல நூற்றாண்டு காலமாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ராமேசுவரம் தீவு வழியாக வர்த்தக உறவு இருந்தது. தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் இலங்கைக்கு தேயிலை தோட்ட வேலைக்கு சென்று வந்தனர். வாணிபமும் செய்து வந்தனர். அவர்கள் மண்டபத்தில் இருந்து பாம்பன் வழியாக படகில் தனஷ்கோடி துறைமுகம் சென்று அங்கிருந்து கப்பலில் இலங்கை தலைமன்னார் சென்று வந்தனர்.

1876-ம் ஆண்டு பயணிகள் வசதிக்காக மண்டபத்துக்கும், தனுஷ்கோடி துறைமுகத்துக்கும் இடையே (பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் வழியாக) 1876-ம் ஆண்டு பாம்பன் கடல் மீது ரெயில் பாலம் அமைக்கப்பட்டது.

1914-ல் பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கியது. பின்னாளில் இந்த ரெயில் பாலத்தின் அடியில் கடலில் கப்பல்கள் சென்று வருவதற்கு வசதியாக தூக்கு பாலமாக மாற்றி அமைக்கப்பட்டது.

மதுரையில் இருந்து செல்லும் ரெயில்கள் மண்டபத்தில் இருந்து கடல் பாலத்தில் சென்று பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் வழியாக தனுஷ்கோடி துறைமுகத்துக்கு செல்லும்.

அப்போது தனுஷ்கோடி துறைமுகம் பெரிய துறைமுகமாக விளங்கியது. மதுரையில் இருந்து வரும் ரெயில் தனுஷ்கோடி கப்பலில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பலுக்குள் சென்று நேரடியாக பயணிகளை இறக்கிவிடும் வசதியும் இருந்தது.

இந்த கடல் ரெயில் பாலத்தின் மொத்த தூரம் 2.45 கிலோ மீட்டர் ஆகும். கடலுக்குள் அமைக்கப்பட்ட 146 தூண்கள் ரெயில் பாலத்தை தாங்கி நிற்கின்றன. இந்த தூண்கள் கட்ட 4 ஆயிரம் டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலேய என்ஜினீயர் ஷெஷ்கர் கட்டியதால் இந்த ரெயில் பாலத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடி தீவு அழிந்தது. ரெயில் பாதையும் சேதம் அடைந்தது. ராமேசுவரம் வரை உள்ள ரெயில் பாதை சீரமைக்கும் பணி நடந்தது. 1966-ம் ஆண்டில் மீண்டும் மண்டபம்- ராமேசுவரம் இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

இந்த நிலையில் ராமேசுவரம் தீவுக்கு பஸ், கார்கள் சென்று வர வசதியாக மண்டபத்துக்கும், ராமேசுவரத்துக்கும் இடையே மேம்பாலம் அமைக்கப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி அடிக்கல் நாட்டினார்.

1986-ம் ஆண்டு முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி வாகனங்கள் செல்லும் மேம்பாலத்தை திறந்து வைத்தார். இதற்கு மறைந்த இந்திராகாந்தி பெயர் வைக்கப்பட்டது. இந்த பாலத்தின் நீளம் 2.23 கி.மீட்டர் ஆகும்.

இந்த பாலத்தின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து ராமேசுவரத்துக்கு நேரடி வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்த மேம்பாலம் இந்தியாவின் 2-வது மிக நீளமான கடல்பாலம் ஆகும். (முதல் பாலம் மும்பை பாந்திரா- வொர்லி இடையே உள்ளது.)

இந்த மேம்பாலத்தையொட்டியே ரெயில் பாலம் உள்ளது. ரெயில் பாலம் பழமையானது என்பதால் கடல்அரிப்பை தடுக்க 6 மாதத்துக்கு ஒருமுறை பாலத்தின் தூண்களில் அலுமினியம் பூசப்பட்டு வந்தது. பொதுவாக 60 கி.மீ. வேகத்துக்கு மேல் காற்று வீசினால் ரெயில்கள் நிறுத்தப்படும்.

முதன் முதலில் 1914 ஆம் ஆண்டு சென்னையில் இருந்து கொலம்போ செல்வதற்கான ரயில்-கப்பல் (சென்னையில் இருந்து ரயில் மூலம் தனுஷ்கோடி வந்தடைந்து பின்னர் கப்பல் மூலம் கொலம்போ செல்லும் boat mail சேவை) பயணத்திற்காக இந்த பாலம் பயன்படுத்தப்பட்டது.

18000 டன் ஜல்லி, 5000 டன் சிமெண்ட், 18000 டன் இரும்பு ஆகியவை கொண்டு கட்டப்பட்ட இந்தப் பாலத்தை கடலில் எழுப்பப்பட்டுள்ள 145 தூண்கள் தாங்கிப் பிடிக்கின்றன. பாலம் கட்டப்பட்டுள்ள இடம், உலகிலேயே இரண்டாவது அதிக துருப்பிடிக்கும் இடமாகும். இருந்தும் இந்தப் பாலம் இன்று வரை கம்பீரமாய் வலிமையுடன் நிமிர்ந்து நிற்கிறது.

சில காலம் முன்பு வரை கப்பல்கள் செல்லும் போது மனிதர்களே இந்த இரும்பு பாலத்தை இயக்கினர். பின்னர் 2007 ஆம் ஆண்டு தென்னக இரயில்வே குறுகிய தண்டவாளங்களை நீக்கி அகல ரயில் பாதையாக மாற்றியபோது, பாலத்தை இயக்க இயந்திரங்களை உபயோகப்படுத்த முடிவு செய்து, இயந்திரங்கள் மூலம் பாலம் இயக்கப்பட்டது.

பாம்பன் பாலத்தின் வழியாக செல்லும் ரயில்கள்:
16713 – Rameswaram exp
16701 – Rameswaram exp