Sunday, December 22, 2013

'அரிக்கமேடு '


'அரிக்கமேடு '


பெயரைப் படித்தால் மிகச் சாதாரணமாக தோன்றும் .
ஆனால் ,எத்தனை தேசம் போனாலும் கிடைக்காத பெருமை , பாரம்பரியம் இம்மண்ணுக்கு உள்ளதென்பதை உரக்கக் கூறும் ஒரு வரலாற்று பொக்கிஷம் .

தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையோரம் பண்டைக்காலத்தில் பல வணிகத்தளங்கள் இருந்தன. அவற்றுள் மாமல்லபுரம், எயில்பட்டினம் (மரக்காணம்), அரிக்கமேடு (Arikkamedu), காவிரிப்பூம்பட்டினம், கொற்கை முதலியன குறிப்பிடத்தக்கன. மேற்கண்ட ஊர்களுள் அரிக்கமேடு என்பது புதுவை மாநிலத்தின் புகழ் சேர்க்கும் முகவரிப் பகுதியாக விளங்குகிறது.

( ஆங்கிலத்தில் ARIKAMEDU ) அரிக்கமேடு என்னுமிடம், தென் இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமாகும்.சோழர் காலத்தில் அரிக்கமேடு ஒரு மீனவ கிராமமாக இருந்து. இங்கிருந்து ரோம் நகருடன் வாணிபம் நடைபெற்றது என்று அகழ்வாராய்ச்சி தெரிவிக்கின்றது .








புதுச்சேரிக்குத் தெற்கே ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அரியாங்குப்பம் ஆற்றின் வலது கரையில் அரிக்கமேடு அமைந்துள்ளது. அந்த இடத்தில், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியோடிய ஆறு வளைந்து வடக்கு நோக்கிச் சென்று பின்னர் கடலில் கலக்கிறது

அரிக்கமேடு அழகான அமைதியான இடம் என்பது மட்டுமின்றி அங்கு வெளிநாட்டு வாணிபம் மிகச் செழிப்புற்று வளர்ந்திருந்திருக்கிறது என்பதும் கவனத்திற்குரியது ஆகும். இந்த இடம் எவ்வளவு வளத்துடனும் வனப்புடனும் விளங்கியது என்பதை அங்குள்ள திருமிகு "பிஞ்ஞோ தெ பெகெய்ன்" (MGR PIGNAY DE BEHAINE) என்ற கிறித்துவ மதகுருவின் அழகிய வீடு நமக்கு நன்கு புலப்படுத்துகிறது. இந்த வீட்டை மக்கள் "அத்ரான் சாமியார் வீடு" என்று அழைத்து வந்தனர். இந்த வீடு 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, புதுச்சேரியில் இருந்த "கிருத்து சபைக்கு" (MISSIONS ETRANGERES) சொந்தமாக இருந்தது. அங்கு பாடசாலைகளும், ஓய்வு இல்லங்களும் நடத்தப்பட்டு வந்தன. தற்போது இச்சாமியாரின் வீட்டின் முகப்பின் ஒரு சிறு பகுதியும், பிற்பகுதி முபுவதும் இடிந்து கிடப்பதைக் காணலாம். இவை அடர்ந்த மாந்தோப்பின் நடுவில் காணப்படுகின்றன. மரங்கள் அடர்ந்து காணப்பட்டாலும், முறைப்படி திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட தோட்டத்தின் அமைப்பு காணப்படுகிறது. இந்த வீட்டிற்கு மேற்கே 150 மீட்டர் தொலைவில் அரியாங்குப்பம் ஆறு ஓடுகிறது.

1937-ஆம் ஆண்டு "திரு.ழுவோ துய்ப்ரேய்" என்றழைக்கப்படும் பேராசிரியர், புதுச்சேரி பிரெஞ்ச்சுக்கல்லூரியில் பணிபுரிந்து வந்தார். இவர் ஒரு பிரஞ்சுக்காரர். இவர் ஒருமுறை அரிக்கமேடு பகுதிக்கு உலாவச் சென்றார். அங்குச் சிதறிக்கிடந்த சிறு சிறு பொருட்களும் கண்ணாடித் துண்டுகளும்,சில அரியகற்களும். பளபளக்கும் பல்வகைக் கற்களும் அவரது கவனத்தைக் கவர்ந்தன. இக்கற்களை அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அவரிடம் கொண்டு வந்து கொடுத்தனர். திரு. துய்ப்ரேய் அவர்களுக்கு மிட்டாய், பணம் அல்லது வேறு ஏதாவது பரிசுப் பொருட்கள் கொடுப்பார். இப்பரிசுப் பொருட்களால் கவரப்பட்ட சிறுவர்கள் மேலும் மேலும் பொருட்களை சேமித்து அவரிடம் கொண்டுவந்து கொடுப்பதில் ஆர்வம் காட்டினர்.

அரிக்கமேடு அழகான அமைதியான இடம் என்பது மட்டுமின்றி அங்கு வெளிநாட்டு வாணிபம் மிகச்செழிப்புற்று வளர்ந்திருந்திருக்கிறது என்பதும் கவனத்திற்குரியது ஆகும். இந்த இடம் எவ்வாளவு வளத்துடனும் வனப்புடனும் விளங்கியது என்பதை அங்குள்ள திருமிகு "பிஞ்ஞோ தெ பெகெய்ன்" (MGR PIGNAY DE BEHAINE) என்ற கிருத்துவ மதகுருவின் அழகிய வீடு நமக்கு நன்கு புலப்படுத்துகிறது. இந்த வீட்டை மக்கள் "அத்ரான் சாமியர் வீடு" என்று அழைத்து வந்தனர். இந்த வீடு 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, புதுச்சேரியில் இருந்த "கிருத்து சபைக்கு" (MISSIONS ETRANGERES)சொந்தமாக இருந்தது. அங்கு பாடசாலைகளும், ஓய்வு இல்லங்களும் நடத்தப்பட்டு வந்தன. தற்போது இச்சாமியாரின் வீட்டின் முகப்பின் ஒரு சிறு பகுதியும், பிற்பகுதி முபுவதும் இடிந்து கிடப்பதைக் காணலாம். இவை அடர்ந்த மாந்தோப்பின் நடுவில் காணப்படுகின்றன. மரங்கள் அடர்ந்து காணப்பட்டாலும், முறைப்படி திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட தோட்டத்தின் அமைப்பு காணப்படுகிறது. இந்த வீட்டிற்கு மேற்கே 150 மீட்டர் தொலைவில் அரியாங்குப்பம் ஆறு ஓடுகிறது.

ரியாங்குப்பம் ஆற்றை ஒட்டிய பகுதியில் பழங்கால அரிக்கமேட்டுப் பகுதியை அகழாய்வு வழி அடையாளம் கண்டுள்ளனர். மிகப்பரந்து விளங்கிய அரிக்கமேடு கடல் அரிப்பாலும் இயற்கை மாற்றங்களாலும் மிகச்சிறிய தீவுப்பகுதியாக இன்று விளங்குகிறது.

அரிக்கமேடு கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை புகழ்பெற்ற வணிகத்தளமாக விளங்கியது. வரலாற்றியல், தொல்லியல் அறிஞர்கள் இதனைக் குறிப்பிடுகின்றனர். அயல்நாட்டுப் பயணிகளான பெரிப்புளுஸ், தாலமி முதலானவர்கள் காவிரிப் பூம்பட்டினத்திற்கும் மரக்காணத்திற்கும் இடையே "பொதுகே' என்னும் வணிகத்தலம் (எம்போரியம்) இருந்துள்ளது எனக் குறித்துள்ளனர். பொதுகே என்பது இன்றைய புதுவை சார்ந்த அரிக்கமேடு பகுதியாகும் என மார்ட்டின் வீலர், கசால், விமலா பெக்லி, பீட்டர் பிரான்சிஸ் முதலானவர்கள் கருதுகின்றனர்.

அரிக்கமேட்டுப் பகுதியை இன்று பார்வையிடச் சென்றால் இன்று நமக்குப் பழந்தமிழக அகழாய்வுக் காட்சிகள் எதுவும் காண முடியாத படி மேட்டுப்பகுதியாக மாமரத்தோப்புகளாக மட்டும் காட்சியளிக்கும். ஏனெனில் இங்கு ஆய்வு செய்த அறிஞர்கள் தங்கள் ஆய்வினை நிறைவு செய்த பிறகு அவற்றைப் பாதுக்காப்பாக மூடி விட்டனர். ஆனால் அரியாங்குப்பம் ஆற்றின் கரையோரம் மண்ணரிப்புகளுக்கு இடையே பழைய பானை ஓடுகள், செங்கல், கட்டடச் சுவர் அமைப்புகளின் எச்சம், சிறு சிறு மணிகள் இவற்றை இன்றும் கீழே கிடக்கக் காணலாம்.

தொல்பொருள் ஆய்வுத்துறை ஏறத்தாழ 21 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்திப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றி வைத்துள்ளது. இப்பகுதியில் கி.பி. 17ஆம் நூற்றாண்டு அளவில் கட்டப்பட்டதாக நம்பப்படும் கட்டிடச் சுவர்களின் மேல் பகுதியைக் காணலாம். அழகிய செங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடச் சுவரின் இடையே மிக அகலாமான, நீளமான கற்கள் இடம்பெற்றுள்ளன. இவை பழைய அரிக்கமேட்டுக் கல் என நம்புவோரும் உண்டு.

அரிக்கமேடு பண்டைக்காலத்தில் பெருமைமிக்க ஊராகப் புகழுடன் இருந்தது. கடற்கோளோ, இயற்கைச் சீற்றமோ, சமய மதப் பூசல்களோ, அயல் நாட்டினரின் படையயடுப்போ இவ்வூரின் பெருமையை அறிய முடியாமல் செய்துவிட்டது. ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் தமிழகத்தின் பகுதிகளைக் கைப்பற்றியபோது பிரெஞ்சுக்காரர்களின் ஆளுகைக்குப் புதுச்சேரி வந்தது.

1940 அளவில் அரிக்கமேட்டுப் பகுதியில் பூமியில் தென்னம்பிள்ளைநட குழிதோண்டிய பொழுது மண்சாடி, மட்பாண்ட ஓடுகள் கிடைத்தன. இதன் விளைவாக 1944இல் மார்ட்டின் வீலர் அரிக்கமேடு பகுதியில் பல்வேறு உண்மைகள் மறைந்து இருக்குமென நினைத்து அகழாய்வில் ஈடுபட்டார். இதில் பல்வேறு உண்மைகள் வெளியுலகிற்கு தெரியவந்தன.

அரிக்கமேட்டுப் பகுதியில் கிடைத்த பொருட்கள் :

அரிக்கமேட்டுப் பகுதியில் அகழாய்வு செய்துப் பார்த்த அறிஞர்கள் அழகிய செங்கல் சுவர், ஈமத்தாழிகள், பலவண்ண மணிகள், பலவகை ஓடுகளைக் கண்டுபிடித்துள்ளனர். இங்குக் கிடைக்கும் பல்வேறு மணிகளை ஒத்துக் கிழக்குக் கடற்கரையின் பழந்தமிழக நகரங்களிலும் மணிகள் கிடைக்கின்றன. கழிமுகப்பகுதிகளில், கிடைத்த ஓடுகளில் தமிழ் பிராமி எழுத்துகள் இடம்பெற்றுள்ளன.

பதினொரு அடி ஆழத்தில் ஒரு மண்டை ஓடும், பூணைக்கண் மணிகளும் கிடைத்துள்ளன. மணி உருக்குச் சட்டங்கள். சாயக்கலவை படிந்த ஓடுகள், கோமேதகக் கல், பச்சைமணிக்கல், படிகமணிகள், அரைத்தான் ஓடுகள், ரோமாணிய காசு, மோதிரம், உறைகிணறுகள் முதலியன குறிப்பிடத்தக்க பொருள்களாகும். இங்குக் காணப்படும் உறைகிணற்றில் சாயம் படிந்து காணப்படுவதால் துணிகளுக்குச் சாயம் ஏற்றும் தொழில் இங்கு நடைபெற்று இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அரிக்கமேட்டுப் பகுதியில் பல்வேறு வடிவங்களில் மணிகள் கிடைப்பதாலும், அவற்றில் வேலைப்பாடுகள் காணப்படுவதாலும் இங்கு மணி உருக்குத் தொழிற்சாலைகள் இருந்தனவோ என்று எண்ண வேண்டியுள்ளது.

பண்டைக்காலத்தில் மணிகளை உருக்கி, காய்ச்சி, துளையிட்டு, தூய்மை செய்து மணிகளை உருவாக்கியுள்ளனர். இங்கு நீலமணி, பச்சைமணி, ஊதாமணி, கருப்பு மணி மிகுதியாகக் கிடைத்தன. தங்கக் காசுகளும் செப்புக் காசுகளும் அரிக்கமேட்டில் கிடைத்துள்ளன. ஏறத்தாழ 200 வகையான மட்பாண்ட ஓடுகள் இங்குச் சேகரிக்கப்பட்டுள்ளன.பானை ஓடுகளில் "அண்டிய மகர்', அந்தக, ஆவி, ஆமி, ஆதித்தியன் எனும் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.

கூர்முனை சாடிகளில் பழச்சாறு தயாரித்து மண்ணில் புதைத்து உண்டுள்ளனர். பழங்காலத்தில் அயல்நாட்டினரை (ரோமானியர்) யவனர் என்றழைத்தனர். இவர்கள் மது அருந்தும் இயல்பு உடையவர்கள். இந்த யவனர்கள் மிகுதியாக இப்பகுதியில் தங்கியிருந்தமைக்குக் கூர்முனைச்சாடிகள் சான்றுகளாக உள்ளன.

எலும்பில் அமைந்த எழுத்தாணி, தங்கத்தில் செய்த கலைப்பொருள், மீன் முள்ளாலான கலைப்பொருள்கள் கிடைத்துள்ளன. சுடுமண் பொம்மைகளில் மனித உருவங்கள் கலைநுட்பத்துடன் காட்டப்பட்டுள்ளன. முடி, முலை, முகம் சிறப்புடன் காட்டப்பட்டுள்ளன. கிளிஞ்சல், சங்கு இவற்றால் செய்த பொருள்களும் கிடைத்துள்ளன.

உரோமானிய விளக்கு, மரச்சாமான்கள், வடகயிறு, மரச்சுத்தி முதலான மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் அரிக்கமேட்டு அகழாய்வில் கிடைத்துள்ளன.

ரோமப் பேரரசன் அகஸ்டஸ் தலை பொறித்த காசு அரிக்கமேட்டில் கிடைத்துள்ளது. அவன் வாழ்ந்த காலம் கி,மு. இருபத்து மூன்று முதல் கி.பி. பதிநான்கு வரை. அக்காலத்தில் அரிக்கமேடு சிறந்த வாணிபத்தலமாக விளங்கியது. அரிக்கமேட்டில் கிடைத்த மணிகள், மட்பாண்ட ஓடுகள் ஆகியவற்றைக் கொண்டு அவ்விடம் 2000 ஆண்டுகாலப் பழைமையுடையது எனக் கருதுகின்றனர். அரிக்கமேட்டில் கிரேக்க ரோமானியர்கள் வந்து தங்கி ஏற்றுமதி, இறக்குமதி செய்தனர். துணி நெய்தல், மட்பாண்டம் செய்தல், மணிவகைகள் செய்தல், சங்கு வளையல் செய்தல், உருக்கு மணி செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டனர். அங்குப் பெரிய நகரமே புதையுண்டு கிடக்கிறது. இவற்றிற்கு அடையாளமாகப் பல சாயத்தொட்டிகள், உறைக் கிணறுகள் அங்கு கிடைத்து வருகின்றன. அரிக்கமேட்டில் உருக்குமணி (Beads) செய்தல் நடைபெற்றுள்ளது. உருகுந் தன்மையுடைய மணற் பொருட்களைச் சூளையிலிட்டு உருகச்செய்து வண்ணமேற்றி நீண்ட இழைகளாகச் செய்து, அதனுள்ளே காற்றைச் செலுத்தி ஊது குழலாக்கிச் சூடு குறைந்த பின்னர் சிறு சிறு துண்டுகளாக வெட்டி மணிகள் செய்து மெருகூட்டி மணிமாலையாகக் கோர்த்துள்ளனர். கருப்பு, நீலம், ஊதா, மஞ்சள், சிவப்பு, பச்சை முதலிய நிறங்களில் மணிகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு அகழ்வாராய்ச்சி செய்தபோது மணி செய்த சிட்டங்களும், கச்சாப் பொருட்களும் உருக்குக் கிண்ணங்களும் கிடைத்துள்ளன.

ஒளியூடுருவக் கூடிய கண்ணாடிக் கற்களைக் கொண்டு மணிகள் (Semi precious stones), செய்தனர். நீலக்கல், பச்சைக்கல், சிவப்புக்கல், கோமேதகம் முதலிய கற்களைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிப் பட்டை தீட்டித் துளையிட்டு, மெருகேற்றி மணியாக்கினர். கடினமான கற்களில் மெல்லிய துளையிட்டுள்ளதைக் காணும்போது அவர்களின் கைவினைத்திறம் தெளிவாகப் புரிகிறது. இதனைக் கண்ணாடி மணிகளென்பர் (Glass Beads). கடலில் கிடைக்குஞ் சங்குகளைக் கொண்டுவந்து அறுந்து பட்டை தீட்டி, மெருகேற்றி மணியாகவும், வளையலாகவும், மோதிரமாகவும் செய்துள்ளனர். அரிக்கமேட்டில் பொன்னால் செய்யப்பட்ட கழுத்தணிகள், காதணிகள், மூக்கணிகள் ஆகியவை கிடைத்துள்ளன. அரியாங்குப்பத்து ஆறு, வெள்ளப் பெருக்கெடுத்தோடி மண்ணை அரித்து விடுகிறது. அப்படி அரிக்கப்பட்ட பகுதியே அரிக்கமேடு என்பர் சிலர். அங்கே அருகன் (புத்தன்) சிலையுள்ளது. ஆதலால் அருகன்மேடு - அருக்கன்மேடு - அரிக்கன் மேடு - அரிக்கமேடு என வழங்கப்பட்டதென்பர் சிலர். இங்குள்ள புத்தர் சிலை பர்மாவிலிருந்து கொண்டுவரப் பட்டதென்றும் அதனால் அது பர்மாக் கோயிலென வழங்கப் பட்டதென்றும், பின்னாளில் பிருமன் கோயில் - பிர்மன் கோயில் என்று மருவியது எனவும் கூறுகின்றனர். இப்பகுதியில் பௌத்தம் பரவியதென்பதற்கு இச்சிலையே சான்றாக உள்ளது.

அயல்நாட்டார் குறிப்பிடும் புதுச்சேரி:

புதுச்சேரியை பண்டைய அயல்நாடு வரலாற்று ஆசிரியர்கள் பெரிப்ளூஸ் என்னும் நூலில் (The Periplus of the Erytheraean Sea) பொதுகெ (Podouke) என்றும், தாலமி (Ptolemy) எழுதிய நூலில் பொதுகா (Podouka) என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதே போல், தமிழகக் கடற்கரையை டிரிமிக்கா எனவும், காவிரிப்பூம் பட்டினத்தைக் காமரா எனவும், மரக்காணத்தை சொபட்னா (சோபட்மா) எனவும் அவர்கள் அழைத்தனர். அதற்கேற்றாற்போல் அரிக்கமேட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள், அங்கு கி.மு. முதல் நூற்றாண்டுக்கு முற்பட்டவொரு வணிகத் துறைமுக நகரம் இருந்ததைக் காட்டுகின்றன.

சங்க இலக்கியமும் புதுச்சேரியும் :

புதுச்சேரியில் வாழ்ந்ததாகக் கூறப்படும் வீரை வெளியனாரும், வீரை வெளியந்தித்தனாரும் பாடிய பாடல்கள் இலக்கிய சான்றுகளாகத் திகழ்கின்றன. தமிழ் இலக்கியங்களில் காலத்தாற் பழைமையானவை சங்க இலக்கியங்கள். அவை கி.மு. 500 ஆண்டுகளை மேல்எல்லையான உடையன. அவற்றில் வீரை வெளியனார், வீரை வெளியந்தித்தனார் என்னும் புலவர்களின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. வீரைவெளி என்னும் ஊர், புதுச்சேரிப் பகுதியிலுள்ள ஒரு சிற்றூராகும். வீரர்வெளி என்பதே வீரைவெளியென மருவியது என்பர். அப்பகுதியில் வாழ்ந்தவர்களாக இவ்விரு புலவர்களையும் கருத இடமுண்டு. வீரைவெளியனார் பாடல் அகநானூற்றில் முன்னூற்று இருபதாம் பாடலாகவும், வீரைவெளியன் தித்தனாரின் பாடல் அந்நூலில் நூற்று எண்பத்தெட்டாம் பாடலாகவும் காணப்படுகின்றன. இவ்விருவரும் ஒருவரே எனக்கருதுவாரும் உண்டு.

அரியாங்குப்பம் ஆற்றால் அரணிட்டுக் காக்கப்படும் அரிக்கமேட்டுப் பகுதியில் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தித் தொடர் ஆய்வு செய்வதால் பழந்தமிழகத்தின் பெருமையையும் அயல்நாட்டுடன் கொண்டிருந்த கப்பல் வழி வணிகத்தையும் நிலைநாட்ட முடியும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இடத்தை தொல்பொருள் குறித்து ஆய்வும் , குறிப்புகளை சேகரிக்கும் திட்டப்பணியிலும் செயல்பட்டு வருகிறேன் ....

கிட்டத்தட்ட மூன்று கிலோ மீட்டர் அளவிற்கு பூமிக்கு நெடுக புதைந்துள்ள ஒரு மாபெரும் நகரம் . அருகிலுள்ள ஆற்றிலும் மறைந்துள்ளது .

ஆச்சரியக்கத்தக்க புகைப்படங்கள் : http://proudtobeatamil.blogspot.in/2012/05/arikamedu-unrevealed-history.html

[ மேலும் தகவல்களுக்கு : http://www.proudtobeatamil.blogspot.in/ ]

( மனமார்ந்த நன்றி : முனைவர் இளங்கோ , திரு.இராச.தியாகராசன் , அறிஞர் சு.வேல்முருகன் அவர்கள் , பொறிஞர்.பாலசுப்ரமணியன் அவர்கள், Mr.SURESH Kumar ( AHS ) ........ )

thanks to

Tuesday, December 3, 2013

ராக்கெட் உருவான வரலாறு (பாகம் - 2)


ராக்கெட் உருவான வரலாறு (பாகம் - 2), 


இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...



வெர்னர் வான் பிரவுன் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த ராக்கெட் விஞ்ஞானி;


அனைவருக்கும் வணக்கம், வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம் ஆகியவற்றால் 1799 ஆம் ஆண்டு ஸ்ரீ ரெங்கப்பட்டினத்தில் (Srirangapatna, Karnataka) நடந்த நான்காவது ஆங்கிலோ – மைசூர் யுத்தத்தில் (Forth Anglo – Mysore War, 1798 – 1799) திப்பு சுல்தான் வீழ்த்தப்பட்டதும் அவரது அரண்மனைக்குள் புகுந்த ஆங்கிலேயப்படைகள் அங்கு எரிந்த மற்றும் எரியாத ராக்கெட்டுகள் என்று எதையும் விட்டுவைக்காமல் ஒட்டு மொத்தமாக 9700 - க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை கைப்பற்றியது. திப்புவின் அரண்மனையில் அமைக்கப்பட்டிருந்த ஓரியண்டல் லைப்ரரி (Oriental Library) என்ற நூலகத்தையும் விட்டுவைக்காத ஆங்கிலப்படைகள் அங்கிருந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் ராக்கெட் தயாரிப்பு சம்மந்தமான ஆய்வுக்குறிப்புகள் மற்றும் தொழில்சீர்திருத்தம் பற்றிய திப்புவின் பல்வேறு நூல்கள் ஆகியவற்றை ஒன்றுவிடாமல் அள்ளிச் சென்றது.
 
இங்கிலாந்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து சீர்திருத்த நடவடிக்கைகளும் திப்புவின் அரண்மனையிலிருந்து கொள்ளையடித்துச் செல்லப்பட்ட நூல்களின் வழிகாட்டுதலோடு மேற்கொள்ளப்பட்டவைதான் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். என்னைப் பொருத்தவரை ஆங்கிலேயர்கள் இந்தியாவிலிருந்து கொள்ளையடித்துச் சென்ற விலைமதிக்க முடியாத பொக்கிஷம் என்னவென்றால் கோகினூர் வைரம் இல்லை. திப்புவின் நூலகங்களில் இருந்து கொள்ளையடித்துச் செல்லப்பட்ட நூல்கள் தான் என்பேன். திப்புவின் ராக்கெட் தயாரிப்பு சம்பந்தமான ஆய்வுக்குறிப்புகளைக் கொண்டு தனது ராணுவத்திற்கு தேவையான ராக்கெட்டுகளை தயாரிக்க விரும்பிய இங்கிலாந்து அரசு அதற்காக அப்போது இங்கிலாந்தில் புகழ்பெற்று விளங்கிய கண்டுபிடிப்பாளர் (Inventor) மற்றும் ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவருமான சர் வில்லியம் காங்கிரிவ் (Sir William Congreve, 1772 – 1828) என்பவரை பணியமர்த்தியது.

தொடர்ச்சியாக சில ஆய்வுகளை மேற்கொண்ட வில்லியம் காங்கிரிவ், திப்பு சுல்தானின் தயாரிப்பு முறைகளில் இருந்த சில அடிப்படை தவறுகளை களைந்து, திப்புவின் ராக்கெட்டை மேம்படுத்தி 1804 ஆம் ஆண்டு காங்கிரிவ் என்ற ராக்கெட்டை (Congreve Rocket) வடிவமைத்தார். பதினாறு அடி நீளம் கொண்ட மூங்கில் கம்புகளின் முனையில் கட்டி ஏவப்பட்ட காங்கிரிவ் ராக்கெட்டுகள் கிட்டத்தட்ட ஒன்பது கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டவையாக இருந்தது. தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையே 1800 – களில் தொடர்ச்சியாக நடந்த பல யுத்தங்களில் (War of 1812, battle of Bladensburg – 1814, battle of Baltimore – 1814) இங்கிலாந்து ராணுவத்தினரால் அமெரிக்க படைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது.

 


தொடர்ந்து இங்கிலாந்திற்கும் பிரான்ஸுக்கும் இடையே, 1815 ஆம் ஆண்டு நடந்த வரலாற்று சிறப்புமிக்க வாட்டர்லூ (Battle of Waterloo, 1815) என்ற யுத்தத்தில் இங்கிலாந்து ராணுவத்தால் பயன்படுத்தப்பட காங்கிரிவ் ராக்கெட்டுகள், அப்போது பிரான்ஸ்சை ஆட்சி செய்து வந்த நெப்போலியனை (Napoleon, 1769 – 1821) சரணடையச் செய்யும் அளவிற்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகுதான் காங்கிரிவ் ராக்கெட்டுகளின் புகழ் உலகமெங்கும் பரவ ஆரம்பித்தது. தொடர்ந்து மற்றுமொறு இங்கிலாந்து கண்டுபிடிப்பாலரான வில்லியம் ஹாலே (William Hale British Inventor, 1797 – 1870) என்பவர் குச்சிகளின்றி இயங்கும் அதாவது தற்போது தாக்குதல் விமானங்களில் (Fighter Aircraft) பயன்படுத்தப்படும் தோற்றத்தை ஒத்த ராக்கெட்டுகளை 1844 ஆம் ஆண்டு வடிவமைத்தார். ஹாலே வடிவமைத்த ராக்கெட்டுகள் அமெரிக்க ராணுவத்தினரால் மெக்ஸிகோ படைகளுக்கு எதிராக அமெரிக்க – மெக்ஸிகோ போரில் (American – Mexican War, 1846 – 1848) பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க மற்றும் இங்கிலாந்து நாடுகளிடையே புகழ்பெற்று விளங்கிய ராக்கெட் தொழில்நுட்பம் ரஷ்ய விஞ்ஞானிகளை தீவிரமாக சிந்திக்க வைத்தது. அமெரிக்க மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் தாக்குதல் ராக்கெட்டுகளை மேம்படுத்துவதில் தங்களது சிந்தனையை செலுத்திக் கொண்டிருக்க, ரஷ்ய விஞ்ஞானிகள் அவர்களிடமிருந்து வேறுபட்டு விண்வெளிப்பயணம் மேற்கொள்ள தேவையான ராக்கெட்டுகளை வடிவமைப்பதில் தங்களது சிந்தனையை செலுத்திக்கொண்டிருந்தனர். இந்நிலையில் விண்வெளியின் தந்தை என்றழைக்கப்படும் ரஷ்ய விஞ்ஞானியான கோன்ஸ்டன்டின் சியோல்கோவ்ஸ்கி (Konstantin Tsiolkovsky, 1857 – 1935) என்பவர் 1903 ஆம் ஆண்டு “The Exploration of Cosmic Space by Means of Reaction Devices”” என்ற தலைப்பில் விண்வெளி வரலாற்றில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த கட்டுரை ஒன்றை வெளியிட்டார்.

 


அந்த கட்டுரையில் சியோல்கோவ்ஸ்கி, திட எரிபொருளை (Solid Fuel) விட திரவ எரிபொருள் (Liquid Fuel) தான் ஒரு ராக்கெட்டுக்கு அதிகப்படியான உந்துசக்தியை தரும் என்றும் அப்படிப்பட ராக்கெட்டுகள் மூலமாகத்தான் நாம் விண்வெளிப்பயணம் மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்தார். மேலும் ராக்கெட்டின் உட்சபச்சவேகம் என்பது ஒரு வினாடியில் ராக்கெட் எரிபொருள் எரிந்து வெளியேற்றும் வாயுக்களின் திசைவேகம் மற்றும் ராக்கெட்டின் எடை ஆகியவற்றை சார்ந்து இருக்கும் என்பதையும் தெரிவித்தார். இதுதான் பிற்காலத்தில் ராக்கெட் சமன்பாடு (Rocket Equation, known as Tsiolkovsky Rocket Equation) என்று அழைக்கப்பட்டது. இதன் பிறகுதான் வளிமண்டலத்தை தாண்டி செல்லும் ராக்கெட் தயாரிப்பு பற்றிய ஆய்வுகள் சுறுசுறுப்படைய ஆரம்பித்தது.

ராக்கெட்டுகளில் 1926 ஆம் ஆண்டு வரை திட எரிபொருள் (Solid Fuel which is oxidation Gunpowder or charcoal, coal, wood pellets, grains) தான் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சியோல்கோவ்ஸ்கியின் ஆய்வுகளை அடிப்படையாகக்கொண்டு ராபர்ட் கோட்டர்ட் (Robert Goddard, 1882 – 1945) என்ற அமெரிக்கர் உலகிலேயே முதன் முதலாக திரவ எரிபொருளில் (Robert used Gasoline as fuel) இயங்கும் வகையிலான ராக்கெட்டுகளை 1926 ஆம் ஆண்டு தயாரித்து பரிசோதித்து வெற்றியும் பெற்றார். கிட்டத்தட்ட 34 நான்கிற்கும் மேற்பட்ட சோதனைகளில் ராபர்ட் கோட்டர்ட்டின் ராக்கெட் அதிகபட்சமாக 2.6 கிலோமீட்டர் உயரம் வரை மணிக்கு 885 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்து உலகெங்கும் இருந்த ராக்கெட் விஞ்ஞானிகளை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

 

சர்வாதிகாரியாக இருந்தாலும் கூட, முதலாம் உலகப்போரில் வீழ்த்தப்பட்ட ஜெர்மனியின் பொருளாதாரத்தை, ஆட்சி பீடத்தில் அமர்ந்த வெறும் நான்கே ஆண்டுகளில் உலகின் முதன்மையான பொருளாதார சக்தியாக மாற்றிக் காட்டிய மிகச்சிறந்த நிர்வாகத்திறன் கொண்டவர் அடால்ப் ஹிட்லர் (Adolf Hitler, 1889 – 1945). ஜெர்மனியின் ஆளுகை எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என்ற அவரது கனவுதான் உலகில் இரண்டாம் உலகப்போர் (Second World War, 1939 – 1945) ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது என்றால் மிகையில்லை. மற்ற நாடுகளின் மீது தாக்குதலை துவங்குவதற்கு முன்பு தனது ராணுவத்தை நவீனப்படுத்துவது இன்றியமையாதது என்பதை உணர்ந்த ஹிட்லர் அதற்குரிய பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார், அவற்றில் ஒன்று தான் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைதிட்டம்.

திட்டத்தை செயல்படுத்த விரும்பிய ஹிட்லர் அதற்காக 1927 ஆம் ஆண்டு பெர்லினுக்கு அருகில் ஒரு தனி ஆராய்ச்சி மையத்தை (Verein Fur Raumschiffahrt, founded in 1927 & dissolved in 1933) ஜோஹன்னஸ் வின்க்ளர் (Johannes Winkler, 1897 – 1947) என்பவரது தலைமையில் ஏற்படுத்தினார். ஜோஹன்னஸால் ராக்கெட் தயாரிக்கும் திட்டத்திற்காக கண்டுபிடிக்கப்பட்டவர் தான் வெர்னர் வான் பிரவுன் (Wernher Von Braun, 1912 – 1977).  சிறுவயதில் இருந்தே ராக்கெட்டுகளின் மீது தீராத காதல் கொண்டிருந்த வெர்னர், ராபர்ட் கோட்டர்ட்டின் கண்டுபிடிப்பு மற்றும் சியோல்கோவ்ஸ்கியின் ஆய்வுக்கட்டுரைகள் போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு 1932 ஆம் ஆண்டு எழுபது கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் “A-4” என்ற ஏவுகணைகளை தயாரிப்பதில் வெற்றிகண்டார். ஆனால் ஹிட்லர் தொலைதூர தாக்குதல் ஏவுகனைகள் மீது அதிக நாட்டம் கொண்டிருந்ததால் A-4 ரக ஏவுகணைகள் சோதனை ஓட்டத்தோடு நிருத்திக்கொள்ளப்பட்டது.

 

வெர்னரின் நேரடிப்பார்வையின் கீழ இயங்கிய வல்லுனர்கள் குழு தொடர்ந்து பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு திரவ எரிபொருளை கொண்டு இயங்கும் (Ethanol + liquid oxygen) விண்ணை பிளந்து செல்லும் உலகின் முதல் பிரம்மாண்டமான ஏவுகணையை தயாரித்து 1942 ஆம் ஆண்டு பால்டிக் கடலுக்கு அருகேயுள்ள பீனேமுண்டே (Peenemunde) என்ற இடத்திலிருந்து ஏவியது. அதுவரையில் விளையாட்டு பொம்மையின் தோற்றத்தை போல் இருந்த ராக்கெட்டுகளின் வடிவம் உருமாறி பிரம்மாண்ட வடிவத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. கிட்டத்தட்ட 3.56 மீட்டர் உயரமிருந்த V-2 என்று அழைக்கப்பட்ட இந்த ஏவுகணை 1000 கிலோ வெடிபொருளை சுமந்துகொண்டு மணிக்கு 2880 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து 320 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கி தரைமட்டமாக்கும் திறன் கொண்டதாக இருந்தது.

தொடர்ந்து ஜெர்மனியில் 1943 ஆம் ஆண்டு V-2 ரக ராக்கெட்டுகளின் உற்பத்தி மின்னல் வேகத்தில் துவங்கப்பட்டது. தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்தின் மீதும், பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் மீது ஏவி தாக்கப்பட்டது, தாக்குதலில் 7250-க்கும் மேற்பட்ட ராணுவவீரர்கள் உயிரிழந்தார்கள், இதில் இங்கிலாந்தில் மட்டும் கிட்டத்தட்ட 3000 ராணுவவீரர்கள் உயிரிழந்ததாக வரலாறு தெரிவிக்கிறது. பாய்ந்து வந்து தாக்கி கனவிலும் அப்போது நினைத்து பார்த்திருக்காத பேரழிவுகளை ஏற்படுத்திய ஜெர்மனியின் பிரம்மாண்ட ராக்கெட்டுகளை உலக நாடுகள் மிரட்ச்சியோடு பார்த்தன.

 

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் படைகள் தோற்கடிக்கப்பட்டதும் ஜெர்மனிக்குள் புகுந்த அமெரிக்கப்படை வீரர்களும் ரஷ்யப்படை வீரர்களும் ஹிட்லரை தேடினார்களோ இல்லையோ வெர்னரை ஆளுக்கொரு புறமாக மும்முரமாக தேடினார்கள். அமெரிக்க உளவு நிறுவனமும் அமெரிக்க ராணுவ வீரர்களுடன் இணைந்து கொண்டு வெர்னரை தேடும் பணியில் ஈடுபட்டது. ஆப்பிரேசன் பேப்பர்கிளிப் (Operation Paperclip) என்று பெயரிடப்பட்ட இப்பணி அமெரிக்கர்களுக்கு வெற்றியை தேடித்தந்தது அதாவது வெர்னர் அமெரிக்க வீரர்களிடம் சிக்கினார். உடனிருந்த ரஷ்ய வீரர்களுக்கு கூட தெரியாமல் வெர்னர் மற்றும் சில ராக்கெட் வல்லுனர்களை அப்படியே அலேக்காக அமெரிக்கா கடத்தி வந்தது அமெரிக்க உளவு நிறுவனம். ரஷ்யப்படை வீரர்களிடமும் வெர்னர் குழுவில் பணியாற்றிய சில வல்லுனர்கள் சிக்கினார்கள். அப்படி அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்களது நாட்டிற்கு கொண்டுவந்த ஜெர்மானிய ராக்கெட் வல்லுனர்களை கொண்டு தங்களது நாட்டிற்க்கு தேவையான ராக்கெட்டுகளை தயாரிக்கும் பணியில் மும்முரமாக இறங்கியது.

 

நாம் தாம் வெர்னரையே கொண்டு வந்துவிட்டோமே பிறகென்ன என்று அசால்டாக அமெரிக்கா இருக்க திடீரென்று ரஷ்யா 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4, உலகே அதிரும்படியாய் “ஸ்புட்னிக் – 1 (Sputnik-1)” என்று பெயரிடப்பட்ட உலகின் முதல் செயற்கைகோளை "ஸ்புட்னிக்" என்ற ராக்கெட்டை கொண்டு விண்வெளிக்கு ஏவி நிலைநிறுத்தியது, என்ன நடக்கிறது என்று அமெரிக்கா உணருவதற்கு முன்பு சரியாக முப்பது நாள் இடைவெளியில் அதாவது நவம்பர் 3 - ல் “ஸ்புட்னிக் – 2 (Sputnik-2)” என்ற மற்றொரு செயற்கைக்கோளை விண்வெளியில் நிலைநிறுத்தியது ரஷ்யா, ஸ்புட்னிக் – 2 உலகின் முதல் உயிரினம் பரந்த செயற்கைக்கோள் ஆகும். லைகா (Laika) என்ற நாய் அந்த செயற்கைகோளில் பயணித்தது குறிப்பிடத்தக்கது. அதைதொடர்ந்து வெர்னர் தலைமையிலான அமெரிக்க விஞ்ஞானிகள் குழு அமெரிக்காவின் முதல் செயற்கை கோளான எக்ஸ்ப்ளோரர் (Explorer-1) 1958 ஜனவரி-1 ஆம் தேதி விண்ணுக்கு ஏவி விண்வெளிப்போட்டியை உறுதிசெய்தது.

 
அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஏற்பட்ட விண்வெளி பயண போட்டிகள் உண்மையில் ஜெர்மனியில் இருந்து இரண்டாக பிரிந்த ஜெர்மானிய விஞ்ஞானிகளுக்கு இடையே நடந்த விண்வெளிப்போட்டிதானே அன்றி அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே நடந்த போட்டி அல்ல. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மனிதனின் கனவாக இருந்த வளிமண்டலத்தை தாண்டிப்பறக்கும் விண்வெளிப்பயணத்தை நினைவாக்கிய வெர்னர் வான் பிரவுன் இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த விஞ்ஞானி என்றால் மிகையில்லை.

பதிவை பற்றிய உங்களது கருத்துக்களை தவறாமல் பகிர்ந்துகொள்ளுங்கள் நண்பர்களே, உங்களது கருத்துக்கள் என்னை மென்மேலும் வளர்த்துக்கொள்ள உதவும், விரைவில் மீண்டும் ஒரு பயனுள்ள பதிவின் வாயிலாக உங்களை சந்திக்கிறேன், நன்றி, வணக்கம் ..!