Friday, November 15, 2013

சச்சின், சச்சின், பை பை சச்சின்..

சச்சின், சச்சின், பை பை சச்சின்..


சச்சின் என்ற தனி நபரின் மலைக்க வைக்கும் சாதனைகள், தேடித்தந்த வெற்றிகள், அவர் மேல் ரசிகர்களும், மற்ற விளையாட்டு வீரர்களும் கொண்டுள்ள அபிமானம் போன்றவற்றைப் பற்றிய புள்ளிவிவரங்களை மேலோட்டமாக தொகுத்தாலே இந்தப் பக்கம் போதாது. ‘கால்பந்து ஜாம்பவான் பீலேவின் ஆயிரத்து281 சர்வதேச கோல்கள், டென்னிஸ் சூப்பர் ஸ்டார் ரோஜர் பெடரரின் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், சர் ஸ்டீவ் ரெட்கிரேவ்சின் 5 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் ஆகியவற்றுக்கு நிகரானது சச்சினின் சாதனை’ என்று மிரர் இதழில் புகழாரம் சூட்டியிருப்பது ஒரு சோறு பதம்.

  2004 ஆம் ஆண்டு...
ஆஸ்திரேலியாவில் விபி கோப்பைத் தொடர் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது...
ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய சுழல் பந்து வீச்சாளர் பிராட் ஹாக்கின் சாதுர்யமான பந்துவீச்சில் சச்சின் ஆட்டம் இழந்தார். மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார் ஹாக். போட்டி முடிந்ததும் சச்சினிடம் சென்ற ஹாக், அந்தப் பந்தை அவரிடம் நீட்டி, ஆட்டோகிராப் கேட்டார். லேசான புன்முறுவலுடன் பந்தை வாங்கிய சச்சின், தன் கையெழுத்தை அதில் பதித்தார். கூடவே ஒரு வாசகமும். அதைப் படித்துப் பார்த்த ஹாக், பதிலேதும் சொல்லாமல் அர்த்தமுடன் சிரித்துவிட்டு விலகுகிறார். அந்தப் பந்தில் சச்சின் எழுதியிருந்த வாசகம் இதுதான்...
‘இனி இதுபோல் நடக்காது!’ (‘ஐகூ ஙிஐஃஃ Nஉஙஉகீ ஏஅககஉN அஎஅஐN!’)
பந்தில் தான் பதித்ததையே அடுத்த போட்டிகளில் களத்தில் பதிவு செய்தார் சச்சின். அதன் பின் நடந்த 21 போட்டிகளில் ஹாக் பந்தை எதிர்கொண்ட சச்சின், ஒருமுறை கூட அவரது பந்தில் அவுட்டாகவில்லை. இதுதான் சச்சின்.

இதுபோன்ற புள்ளிவிவரங்களும், பட்டியல்களும் கிரிக்கெட்டில் மட்டுமல்ல, வேறு பல விளையாட்டுகளிலும் உள்ள சாதனையாளர்களுக்கும் உண்டுதான். ஆனால், சச்சின் என்ற ஒரு மனிதரின் மேல் மட்டும் ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு, மரியாதை..? எதிர்பார்த்த ஓய்வுதான் என்றாலும் ஏன் அதை ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறது..? இப்படியான அத்தனை கேள்விகளுக்கும் இருப்பது ஒரே பதில்தான். சச்சினின் தனி மனித ஒழுக்கம், விடாமுயற்சி, தளராத தன்னம்பிக்கை, உண்மையான தேசப்பற்று, பணத்திற்குப் பணியாத நேர்மை..!

அவரது சாதனைகளை எல்லாம் ஒரு ஓரமாக வைத்துவிட்டுப் பார்த்தால், ஒரு விக்கெட்டை வீழ்த்தினால்கூட கங்கனம் நடனம், அரை சதத்தைக் கடந்ததும் வானத்துக்கும் பூமிக்குமாக துள்ளிக் குதிப்பது, அவுட் கொடுக்கும் நடுவர்களை முறைத்துப் பார்த்தபடி நடப்பது, அரைவேக்காட்டுப் புகழ் வெளிச்சத்தில் சர்ச்சைகளில் சிக்குவது என சுழலும் இன்றைய கிரிக்கெட் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே இருக்கிறது. புதுத் தலைமுறை வீரர்கள் சச்சின் அளவுக்கு சாதனைகள் படைக்க வேண்டாம். அவர் சொல்லாமல் சொல்லிச் சென்றிருக்கும் பாடங்களை பின்பற்றினாலே போதும்.

ஆரம்பக் காலத்தில் படிப்பில் மார்க் வாங்குவதை விட, கிரிக்கெட்டில் தான் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார் சச்சின் என்பதை உணர்ந்த அவரது அப்பா, மகனை கிரிக்கெட்டில் முழுமையாக ஈடுபட அனுமதியும்<, ஊக்கமும் அளித்தார். அதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல ஆரம்பித்தார் சச்சின். அப்போது அவரின் நண்பர்கள் பலர் பயிற்சி வகுப்பை கட் அடித்துவிட்டு, பக்கத்தில் உள்ள வடாபாவ் கடைக்கு செல்வது வழக்கம். ஆனால், தந்தை தன்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பும், சுதந்திரமும் கொடுத்திருப்பதை தவறாக கையாள விரும்பாத சச்சின், ஒரு நாளும் அதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட்டதில்லை.

இத்தனை சாதனைகள் புரிந்திருந்தாலும், அவை அத்தனைக்கும் அடித்தளமாக சச்சின் சுட்டிக் காட்டுவது தனது ஒழுக்கத்தைத்தான். கிரிக்கெட் மேல்கொண்ட தீராக்காதலின் காரணமாக, தனது உணவு பழக்கங்களில் கூட ஒரு ஒழுக்கத்தை கடைபிடித்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா உங்களால். ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். காரணம் இதை சொல்லியிருப்பது சாட்சாத் சச்சினேதான்.

“அகமதாபாத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு ஆட்டத்தின் போது, அங்குள்ள சூடான தட்ப வெப்பத்தை சமாளிக்கவேண்டும் என்பதற்காக போட்டிக்கு முன் ஒரு வார காலத்திற்கு காரமான மற்றும் அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து விட்டேன். இதனால் உடல் சூடு அதிகரிக்காது, அந்த இடத்தில் விளையாட மனதோடு, உடலும் பொருந்திப்போகும். சென்னையில் விளையாடும்போது, அப்போது வெயில் காலமாக இருந்தால், நள்ளிரவில் அலாரம் வைத்து எழுந்து நிறைய தண்ணீர் குடித்து விட்டு மீண்டும் உறங்கச் செல்வேன். இதனால் போட்டியின் போது உடலில் நீர் வற்றிப்போதல் குறைந்து, சக்தி பாதுகாக்கப்படும். இப்படி ஊருக்கு ஏற்ப என் உணவு வழக்கங்களை மாற்றியமைத்துக் கொள்வேன்” என்கிறார் சச்சின்.

ரசிகர்களிடமும், மீடியாக்களிடமும் பாந்தமாக நடந்துகொள்வதில் சச்சினுக்கு நிகர் எவருமில்லை. “பத்திரிக்கைகளிலும், புத்தகங்களிலும் என் புகைப்படமோ, செய்தியோ வருவது இன்றுவரை தன் குடும்பத்தினருக்கு பெரிய சந்தோஷம் தரும் விஷயமாகவே இருக்கிறது” என்கிறார் டைம் பத்திரிகையின் அட்டையில் கூட இடம் பிடித்து விட்ட சச்சின். இப்படி தன் குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் சச்சின், தன் குருவுக்குக் காட்டும் மரியாதையோ அபரிதமானது.

ரமாகாந்த் அச்ரேகரிடம் கிரிக்கெட் கோச்சிங் எடுத்தபோது, முதல் ஆளாக மைதானத்துக்கு வந்து, கடைசி ஆளாகப் போவார்.
பாராட்டும், புகழும் கிடைக்கும் ஒவ்வொரு தருணத்திலும், ஆரம்ப காலத்தில் தன்னை மெருகேற்றிய கோச் அச்ரேக்கரை நன்றியுடன் நினைக்க மறந்ததில்லை. இதை பல மேடைகளில் பதிவும் செய்திருக்கிறார். எந்த நாட்டிற்கு விளையாடச் சென்றாலும், அதற்குமுன் ரமாகாந்த் அச்ரேக்கரை சந்தித்து ஆசி பெற்று விட்டுத்தான் செல்வார்.

ரிச்சர்ட்ஸ், லாரா, அன்வர், ஜெயசூர்யா, கங்குலி என கிரிக்கெட் உலக ஜாம்பவான்களின் கனவாக இருந்து, கடைசி வரை நிறைவேறாமல் போன 200 ரன்களை முதல் வீரராக தொட்டார் சச்சின். அதுவும் மிகச்சிறந்த அணியான தென்னாப்ரிக்காவுக்கு எதிராக என்பது கூடுதல் சாதனை. ஸ்டெயினும், பார்னலும் உசுப்பேற்றியபோதும் மவுனம் காத்து, தனது ரன் மழையை பதிலாகக் கொடுத்தார். காலீசின் பந்துவீச்சில் வலது புறம் சென்று இடப்பக்கமாக அவர் எடுத்த 4 ரன்கள் இன்றுவரை பந்துவீச்சாளர்களுக்கு புரியாத புதிர்.

சச்சின் 194 ரன்களைக் கடந்த அந்த பெருமைக்குரிய நிமிடத்தில் கேலரியில் இருந்த ரசிகர்களும், டிரசிங் ரூமில் இருந்த சக வீரர்களும் ஆர்ப்பரிக்க, முகத்தில் எந்த சலனமும் இல்லாமல், மட்டையை உயர்த்தி ஆரவாரத்தை ஏற்றுக் கொள்ளாமல், அடுத்த பந்தை எதிர் நோக்கி பார்வை குவித்து சச்சின் நின்ற அந்த வினாடி... சாதனை உச்சத்தின் எளிமை. போட்டி முடிந்தபின், ‘இந்த இரட்டை சதத்தை இந்திய மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்’ என்று அவர் சொன்னபோது, இந்தியா பெருமிதத்தில் நெகிழ்ந்துதான் போனது.

 
 இவை எல்லாவற்றையும் இன்றைக்கு கிரிக்கெட் உலகில் கால் பதித்திருக்கும் இளம் வீரர்கள், சச்சினைப் பார்த்துக் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் ஒன்று இருக்கிறது. அது விளம்பரப் படங்களில் நடிப்பதற்கான வரையறை அல்லது கொள்கை. கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும், மது மற்றும் புகையிலை சார்ந்த எந்த விளம்பரங்களிலும் நடிப்பதில்லை என்பதில் மிகத் தீர்மானமாக இருந்தார், இருக்கிறார். வீதியில் கிரிக்கெட் விளையாடும் கோடானுகோடி சிறுவர்களின் ரோல்மாடலாக தான் இருப்பதை உணர்ந்திருக்கும் சச்சின் எக்காரணம் கொண்டும், அவர்கள் தடம் புரள தான் காரணியாக இருந்துவிடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கிறார். இந்த உறுதியே 20கோடி தருகிறோம் என்ற ஒரு பீர் நிறுவனத்தின் விளம்பர அழைப்பை நிராகரிக்கச் செய்தது. “என்னுடைய ரசிகர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள். அவர்களை தீயப்பழக்கங்களுக்கு இட்டுச்செல்லும் எந்த விளம்பரத்திலும் நடிக்க மாட்டேன்” என்று ஓய்வு அறிவித்தபின்னரும் சொல்லும் இந்த மன திடம் பிற வீரர்களுக்கு வருமா என்பது சந்தேகம்.

வெளியுலக பிம்பத்தில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் போதை வஸ்துக்கள் பக்கம் தலைவைத்து படுக்காதவர். இத்தனை ஆண்டுகால அவரது வாழ்க்கைப் பயணத்தில் இதுவரை அவர் பார்ட்டிகளில் கலந்துகொண்டது போன்றோ, நடிகைகளுடன் குலாவுவது போன்றோ ஒரு துணுக்குக் கூட வந்தது இல்லை என்பது இதற்கான சான்று.

சீசரின் மனைவி மட்டுமல்ல, சச்சினும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டே இருந்து வந்திருக்கிறார். சூதாட்ட சர்ச்சைகள் இந்திய கிரிக்கெட் அணியை சூறையாடியபோது, அந்தப் புயலால் எந்த பாதிப்பிற்கும் உள்ளாகாமல் இருந்த நேர்மை நாயகன். அந்த காலகட்டத்தில் ‘அவர்’, ‘இவர்’ என வீரர்களைப் பற்றிப் பூடகமாக உலா வந்த செய்திகளைப் படித்த மக்கள்கூட, மறந்தும் அந்த அவர், இவரில் சச்சினைப் பொருத்திப் பார்க்கவில்லை. ஆயிரக்கணக்கான ரன்கள், முறியடிக்க முடியாத சாதனைகள் என சச்சின் சுமந்திருக்கும் மணி மகுடத்தில் வைரமாக ஜொலித்துக் கொண்டிருப்பது இந்த நேர்மைதான்.

சக வீரர்கள், எதிரணியினர், ரசிகர்கள் என சகல தரப்பினரையும் பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கும் சச்சின், போட்டி நடுவர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தத் தவறுவதில்லை. ஸ்டெம்புகள் எகிறினாலும், மூன்றாவது நடுவரின் முடிவுக்காக காத்திருக்கும் வீரர்களுக்கு மத்தியில், பந்தை தைத்திருக்கும் நூலின் இழை தன் பேட்டில் உரசிச் சென்றதாக உணர்ந்தாலே கிளவுஸ்களை கழற்றிவிட்டு, மட்டையை கைகளுக்குள் இடுக்கிக் கொண்டு வானம் பார்த்த சோகப் பார்வையுடன் களத்தைவிட்டு வெளியே நடக்கத் தொடங்கிவிட்டார். ‘ஹவுஸ்சாட்...’ என்ற பந்துவீச்சாளரின் குரல் எழும்பும் முன்னே, பந்தின் பாதை நடுவரின் மனக்கண்ணில் மீண்டும் விரியும் முன்னே மைதானத்தைவிட்டு வெளியே போய்விடுவார். கிரிக்கெட் உலகின் கெடுபிடி நடுவர்களைக் கூட வியந்து பார்க்க வைத்த சச்சினின் நன்னடத்தை இது.

சிறுவர்களின் ஆதர்ச நாயகனாக வலம் வரும் சச்சின் பதிலுக்கு அவர்கள் மீது காட்டும் அன்பு அலாதியானது. குழந்தைகள் ஆட்டோகிராப் புத்தகங்களை நீட்டினால் எத்தனை அவசர வேலையாக இருந்தாலும், நின்று அவர்களுக்கு கையெழுத்திட்ட பிறகே நகர்வார். 



அதேபோல் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் மன நலம் குன்றிய குழந்தைளை எங்கே பார்த்தாலும், அவர்களின் கன்னங்களைச் செல்லமாக தட்டிக்கொடுத்து கொஞ்சுவார். தனது மாமியார் நடத்திவரும் அப்னாலயா என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆண்டுக்கு 200 ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவி வருகிறார் என்பது சச்சினின் ஈர முகம்.
 
200வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சச்சினை நாம் களத்தில் பார்க்க முடியாது. உடல் முழுக்க பெயிண்ட்டால் சச்சின் என எழுதி தேசியக் கொடியை பறக்கவிட்டுக் கொண்டிருக்கும் அந்த தீவிர ரசிகரையும் பார்க்க முடியாது. 

லிட்டில் மாஸ்டர் என்ற பதாகைகளையும் பார்க்க முடியாது. ஆனால் தன் நடத்தையால், பாடங்களால் இன்னும் பல சச்சின்கள் உருவாவதற்கான விதைகளை ஊன்றிவிட்டு, அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிட்டு ஒதுங்குகிறார் சச்சின்.
பை பை சச்சின்..!
- கர்ணா.



நன்றி- சண்டேஸ்பெஷல், தினமலர்.

Wednesday, November 13, 2013

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டின் 10 முக்கிய தருணங்கள் !!!

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டின் 10 முக்கிய தருணங்கள் !!!


உலக கிரிக்கெட்டிற்கு பல்வேறு மட்டத்தில் பெரிய பங்களிப்பு செய்த மாஸ்டர் பேட்ஸ்மென் மற்றும் உலகின் தலை சிறந்த பேட்ஸெமெனாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டின் 10 முக்கியக் கணங்களை தொகுக்கலாம். இது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக் மாறுபடினும், இந்த 10 கணங்களை சச்சினே மறக்கமாட்டார் எனலாம்.

1. ஏப்ரல் 2, 2011 உலகக் கோப்பை 2011:

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் எப்போதுமே சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்துபவர். 2011 உலகக் கோப்பையின் 9 போட்டிகளில் 482 ரன்களை எடுத்தார் சச்சின் 120 ரன்களை இங்கிலாந்துக்கு எதிராக அவர் எடுத்ததுதான் அதிகபட்ச ஸ்கோர் ஆனால் அந்தப்போட்டி டிராவானது. உலகக் கோப்பை 2011-இல் சச்சின் 2 அரைசதம், 2 சதம் எடுத்தார். 52பவுண்டரிகள் 8 சிக்சர்கள் மற்றும் 91.98 ரன்கள் ஸ்ட்ரைக் ரேட்.

இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக சச்சினே வெற்றி ரன்களை அடிக்க நினைத்திருப்பார் ஆனால் 18 ரன்களில் அவர் வீழ்ந்தார். பிறகு கம்பீர், தோனி இந்திய அணீயை வெற்றிபெறச் செய்தனர். இதனை தன் கிரிக்கெட் வாழ்வின் சிகரமான கணம் என்று சச்சினே பின்பு அறிவித்தார்.

2. சச்சினின் 100வது சதம்!

இது சச்சினுக்கு ஒரு பெரிய தலைவலியாக விடிந்தது. ஆனால் அவர் அத்தனை நெருக்கடிகளையும் விமர்சனங்களையும் தாங்கிக் கொண்டு ஆசியக் கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிராக இந்த 100வது சதத்தை எடுத்து முடித்தார். 

தோல்வி சச்சினுக்கு பிடிக்காத ஒன்று ஆனால் இந்த போட்டியில் சச்சின் உலக சாதனை புரிந்தும் இந்தியா தோல்வி தழுவியது. சச்சினுக்கு தோல்வி பிடிக்காது என்பது அவர் கேப்டனாக இருந்த காலத்தில் அடைந்த அவரது எரிச்சல் நிறைந்த வாசகங்களே தெரிவிக்கும். ஆனால் சாதனை சதம் என்பது சாதனை சதம்தானே!

3. பிராட்மேனின் கனவு அணியில் சச்சின் இடம்பெற்றது!

ஆஸ்ட்ரேலிய லெஜென்ட் டான் பிராட்மேன் அனைத்து கால சிறந்த அணியை அறிவித்தார். பிரையன் லாரா, விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற வீரர்களுக்கே இந்த அணியில் இடமில்லை. 


ஆனால் பிராட்மேன் சச்சினை தேர்வு செய்திருந்தார். 69 வீரர்களை டான் பிராட்மேன் அலசி 11 பேரைத் தேர்வு செய்தார். இன்டக் 69 பேரில் சுனில் கவாஸ்கர், கபில்தேவ் ஆகியோரும் இருந்தனர்.

4. 2003 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த 98 ரன்களை மறக்க முடியுமா?
2003 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் கடினமான காலக்கட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றேயாகவேண்டிய நெருக்கடியில் இருந்தது. பாகிஸ்தான் முதலில் பேட் செய்து 270 ரன்களுக்கு மேல் குவித்தது. வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர் ஆகியோர் இருக்கும்போது இந்தியா ஜெயிக்குமா என்று பலரும் பேசினர். ஆனால் நடந்தது என்ன? சச்சின், சேவாக் இருவரும் அடித்த அடியில் முதல் 11 ஓவர்களில் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது. சச்சின் ஷோயப் அக்தரை அடித்த அந்த அப்பர் கட் சிக்சரை இன்னும் மறக்க முடியாது. 
சச்சின் ஷோயப் அக்தரை அடித்த அந்த அப்பர் கட் சிக்சர

98 ரன்கள் எடுத்தார் சச்சின் இந்தியா வெற்றி பெற்றது. சச்சினின் மிகச்சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று.

5. உலக சாதனை இரட்டைச் சதம்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சச்சின் இந்த அபார இன்னிங்ஸை ஆடினார். ஒருவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நினைத்து கூட பார்க்கமுடியாது டேல் ஸ்டெய்ன், மோர்கெல் இருக்கும்போது எங்கிருந்து 50 ரன் வரும் என்றே கூற முடியாது. ஆனால் 147 பந்துகளில் 200 ரன்களை விளாசினார் சச்சின் 25 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடித்தார். இந்தியா உலக சாதனை 401 ரன்களை எடுத்தது. தென் ஆப்பிரிக்கா 153 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. இதற்கு முன்னர் நியூசீலாந்தில் 167 ரன்களையும் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் 175 ரன்களையும் எடுத்தபோதே சச்சின் இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

6. 1999 உலகக் கோப்பையில் உணர்ச்சிகரமான சதம்!

டெண்டுல்கரின் தந்தை இறந்து போன சமயம், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சச்சின் விளையாடவில்லை. 


பிறகு கென்யாவுடன் விளையாட நேரிட்டது. இதற்கு முன்னர் 21 ஒருநாள் சதம் எடுத்திருந்தார் சச்சின், இந்த சதம் தந்தை இறந்தபிறகு உடனடியாக எடுத்த சதம் என்பதால் அவரது வாழ்வின் உணர்ச்சிகரமான சதமாக இது அமைந்தது. டெணுல்கர் இதில் 140 ரன்களை எடுத்தார்.

7. 1998ஆம் ஆண்டு ஷார்ஜாவில் அடித்த மணல் புயலும் சச்சின் புயலும்

ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக எடுத்த் 143: இறுதிக்கு செல்ல இந்திய இத்தனி ரன்களை எடுக்கவேண்டும் என்பது நிர்பந்தம். பெவன் சதம் எடுக்க ஆஸி. 284 ரன்களை எடுத்தது. இந்தியா 285 ரன்களை எடுத்தா பிரச்சனையில்லை. அல்லது தோற்றால் குறைந்தது 254 ரன்களை எடுத்திருக்கவேண்டும். ஆனால் திடீரென மைதானத்தில் மணற் சூறைக்காற்று வீச இந்தியா வெற்றி பெற 276 ரன்களும் தகுதி பெற 237 ரன்களும் தேவை. மீண்டும் களமிறங்கிய சச்சின் தகுதி பெறுவதைக் குறிக்கோளாக வைக்காமல் உண்மையான வெற்றிக்காக ஆடினார். 


காச்பரோவிச்சை அடித்த சிகர்களை மறக்க முடியுமா கடசியில் ஆடிய பேயாட்டத்தை மறக்க முடியுமா? 131 பந்துகளில் 143 ரன்களை விளாசினார் சச்சின். கடைசியில் நடுவரின் மோசமான தீர்ப்புக்கு அவுட் ஆனார். இல்லையெனில் உண்மையில் இந்தப்போட்டியில் இந்தியா வெற்றியே கூட பெற்றிருக்கும்.

8. அதே ஷார்ஜா, இறுதிப் போட்டி சதம்!

24 ஏப்ரல் 1998 சச்சினின் பிறந்த தினம். அன்றைய தினம் அடித்த சதம் மறக்க முடியாதது. ஆஸ்ட்ரேலியா முதலில் பேட் செய்து 121/5 என்று திணறி பிறகு ஸ்டீவ் வாஹ், டேரன் லீமேன் இன்னிங்ஸ்கள்லினால் 272 ரன்கள் எடுத்தது. இந்தியா துரத்தக் களமிறங்கியவுடன் சச்சின் போட்டுத் தக்கவாரம்பித்தார். காஸ்பரோவிச்சை இரண்டு சிகர்கள் விளாசி அடிதடியைத் தொடங்கிய சச்சின்.


 ஷேன் வார்ன் இதன் பிறகுதான் சச்சின் தனக்கு பயங்கர சொப்பனங்களை கொடுக்கிறார் என்றார். 

சச்சின் 134 ரன்கள் எடுத்தார் அந்தப்போட்டியில் ஒரு அபாரமான ஒருநாள் இன்னிங்ஸ் இதுவாகும்.

9. 2008ஆம் ஆண்டு ஆஸ்ட்ரேலிய மண்ணில் முதல் ஒருநாள் சதம

சச்சின் டெண்டுல்கர் அவ்வளவு ஆட்டங்களை ஆடியிருந்தாலும் ஆஸ்ட்ரேலிய மண்ணில் அவரது அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த 93 ரன்களாகவே இருந்தது. தோனி தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் நுழைந்தது. இந்தப் போட்டியில் சச்சின் 126 ரன்களை எடுத்து இறுதி வரை ஆடி தனி மனிதனாக ஆஸ்ட்ரேலியா பந்து வீச்சை அடித்து நொறுக்கி வெற்றிபெறச்செய்தார். 


ஆஸ்ட்ரேலியா 239 ரன்களை எடுத்தது. ரோகித் ஷர்மாவுடன் இணைந்து சச்சின் 123 ரன்களை சேர்க்க ரோகித் 66 ரன்களை எடுத்தார். சச்சின் தனது 42வது ஒருநாள் சதத்தை எடுத்தார். இந்தியா வெற்றி பெற்றது.

அதே சிபி தொடர் இரண்டாவது இறுதிப் போட்டி சச்சின் அபாரம்!

முதல் போட்டியில் தோல்வியடைந்த கடுப்பில் ஆஸ்ட்ரேலியா இரண்டாவது இறுதிப்போட்டிக்கு வந்தது. ஆட்டம் அவர்களுக்கு சாதகமான பிரிஸ்பன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்தது சச்சின் மற்றொரு சதத்திற்கான அபார இன்னிங்சை ஆடினார். சிறந்த கவர் டிரைவ்கள், அப்பர் கட்கள், புல் ஷாட்கள் என்று தூள் கிளப்பினார். ஆனால் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். இது சச்சினின் டாப் ஒருநாள் இன்னிங்ஸ் என்பதில் ஐயமில்லை. இந்தியா 258 ரன்கள் எடுக்க ஆஸ்ட்ரேலியா 249 ரன்களி முடிந்தது. 



முதன் முறையாக சிபி தொடர் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா சாம்பியன் ஆனது.

10. சச்சின் முதன் முதலாக ஒருநாள் போட்டியில் துவக்கத்தில் களமிறங்கிய போட்டி!

27 மார்ச் 1994- சச்சின் ஆக்லாந்தில் நியூசீலாந்துக்கு எதிராக அவராகவே கேட்டு வாங்கி துவக்கத்தில் களமிறங்கினார். சச்சின் என்றால் யார் என்றும் அவர் மீது ஒரு பயமும் ஏற்படுத்திய இன்னிங்ஸ் ஆகும் இது; பந்து வீச்சுக்கு சாதகமான கரடு முரடு பிட்சில் நியூசீலாந்து அணி 142 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா களமிறங்கும்போது இந்தப் பிட்சில் இந்தியா கஷ்டம் திக்குமுக்காட வேண்டும் என்றெல்லாம் வர்ணனையாளர்கள் தெரிவித்துக் கொண்டிருந்தனர். ஆனால் சச்சின் துவக்கத்தில் களமிறங்குவார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அதுதான் நடந்தது.

 
டேனி மாரிசன், பிரிங்கிள், அடாது மழை பெய்தாலும் விடாது டைட்டாக வீசும் கெவின் லார்சன் என்று நியூசீ தன்னம்பிக்கைய்டந்தான் இருந்தது. ஆனால் என்னாவாயிற்று? சச்சின் புயல் போல் ஒரு இன்னிங்சை ஆடினார். 49 பந்துகளில் 82 ரன்களை விளாசினார் அதில் 15 பவுண்டரி 2 சிக்சர்கள். 13 ஓவர்களில் ஸ்கோர் 100-ஐ கடைந்தது. இந்தியா 23 ஓவர்களில் 143 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அப்போது துவங்கிய துவக்க வீரர் பயணம் பல அதிரடி இன்னிங்ஸ்களை கண்டபிறகே ஓய்ந்தது.

அதேபோல் என்றைக்கும் மறக்க முடியாத சச்சினின் முதல் ஒருநாள் சதம்!

சுமார் 78 போட்டிகளில் சதம் எடுக்க முடியாமல் 80களில் ஆட்டமிழந்த சச்சின் துவக்க வீரராக களமிறங்கி சில போட்டிகளேயாகிருந்தன. அப்போது இலங்கையில் சிங்க டிராபி கிரிக்கெட் போட்டிகள் நடந்தது. ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 9 செப்டெம்பர் 1994ஆம் ஆண்டு சச்சின் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக தன் முதல் ஒருநாள் சததை எடுத்தார். டாஸ் வென்று இந்தியா முதலில் பேட் செய்ய சச்சின், பிரபாகர் களமிறங்கினர். கிளென் மெக்ராவை சச்சின் புரட்டி எடுத்தார். அவர் 6 ஓவர்களில் 41 ரன்களை கொடுக்க கட் செய்யப்பட்டார். மெக்டர்மட் பந்தை பிளிக்கில் சச்சின் சிக்ஸ் அடித்ததை மறக்க முடியாது. 



8பவுன்டரி 2 சிகர்களுடன் அவர் 110 ரன்களை எடுத்த இன்னிங்ஸில் ஷேன் வார்னும் சாத்து வாங்கினார். இந்தியா 246 ரன்களை எடுக்க ஆஸ்ரேலியா 215 ரன்களுக்குச் சுருண்டு காலியானது. 

தேங்க்ஸ் டு 
கூகுளே இமேஜ்'.
அண்ட் 
வெப்துனியா ..

ரஹ்மான்பாஎத்...

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட் சாதனைகள்

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட் சாதனைகள்....


ஒருநாள் கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த, இதுவரை இல்லாத இனிமேலும் அவரது சாதனைகளை முறியடிக்கக் கடினமாகும் ஒரு வீரர் சச்சின் டெண்டுல்கர் இவர் நிகழ்த்தாத சாதனைகளே இல்லை எனலாம். அந்த வகையில் அவரது ஒருநாள் கிரிக்கெட் சாதனைகளைப் பற்றிப் பார்ப்போம்:

463 ஒருநாள் போட்டிகளில் 44.83 என்ற மிகச்சிறந்த சராசரியுடன் 18,426 ரன்களை குவித்துள்ளார் ரன் மெஷின், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர்.

அதிக போட்டிகள் : 463

அதிக ஆட்ட நாயகன் விருதுகள் : 62

ஒருநாள் தொடர் நாயகன் விருதுகள் : 15

அதிக நாள் கிரிக்கெட்டில் இருந்தது : 22 ஆண்டுகள் 91 நாட்கள்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 15,000 ரன்களுக்கும் மேல், 154 விக்கெட்டுகள், 140 கேட்ச்கள் என்று அரிய டிரிபிள் சாதனை சச்சினுக்கேயிரியது.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் : 18,426 ரன்கள்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்: 49



ஒரே அணிக்கு எதிராக அதிக சதங்கள் : ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக 9 சதங்கள்!

இரண்டு அணிகளுக்கு எதிரகா அதிக ஒருநாள் சதங்கள்: ஆஸி.க்கு எதிராக 9, இலங்கைக்கு எதிராக 8;.

 

50க்கும் மேலான ரன்கள் அதிக முறை: 145; 49 சதங்கள், 96 அரை சதங்கள்.

ஒரே ஆண்டில் அதிக ஒருநாள் போட்டி ரன்கள்: 1894 ரன்கள் (சராசரி 65.31), 34 போட்டிகள் இது நடந்தது 1998ஆம் ஆண்டு.

ஒரே ஆண்டில் 1000 ரன்கள் : சாதனையான 7 முறை.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக 90-கள் - 18 முறை; இது சதமாகியிருந்தால் இன்று சச்சின் சாதனைப் பட்டியல் மேலும் உக்கிரமாகக் காட்சியளிக்கும்.

அதிக பவுண்டரிகள் - 2016 பவுண்டரிகள்

ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள்: 3077 ரன்கள், 71 போட்டிகள், சராசரி 44.59.

இலங்கைக்கு எதிராக அதிகபட்ச ரன்கள் : 3113, (43.84 சராசரி) - 57 போட்டிகள்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக சதங்கள்: 5

பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் : 2,556.

 
பாகிஸ்தானுக்கு எதிராக அதிக சதங்கள்- 5 (லாராவுடன் பகிருந்து கொள்ளும் ஒரே சாதனை)

ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2010ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி 200 ரன்களை குவித்து சாதனை படைத்தார் சச்சின்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள்: 2,278 சராசரி 56.95, 45 போட்டிகள்.

உலகக் கோப்பை போட்டிகளில் அதிக சதம் - 6 (44 இன்னிங்ஸ்)

ஒரே உலகக் கோப்பையில் அதிகபட்ச ரன்கள்: 673 ரன்கள் 2003 உலகக் கோப்பை, சராசரி 61.18 - 11 ஆட்டங்கள்.

இரண்டு உலகக் கோப்பை போட்டிகளில் மொத்தம் 500 ரன்களுக்கும் அதிகமாக ஸ்கோர் செய்த ஒரே பேட்ஸ்மென் 2003-இல் 673 ரன்கள் 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 7 போட்டிகளில் 523 சராசரி 87.16.




bye bye sachin..