Thursday, August 6, 2015

ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் ஒரு முழு வரலாறு - II


 ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் ஒரு முழு வரலாறு - II

இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...



காலை 7.30 மணி. 

ஹிரோஷிமாவில் விழும் வழக்கமான அமெரிக்க போர் விமான குண்டுகளால் ஏற்படும் சேதங்களைத் தடுக்க தடுப்புகளை உருவாக்கும் வேலையில் ஜப்பானிய குழந்தைகளும் ஈடுபடுவது வழக்கம். பள்ளிக்குச் செல்லும் முன் வழக்கம்போல இந்தப் பணியில் பங்கேற்க 12 வயதான சுமார் 8,000 பிஞ்சுகள் ஹிரோஷிமாவின் மையப் பகுதியில் உள்ள Aioi Bridge பாலம் அருகே கூடுகின்றனர். 


7.50 மணி 

எல்லோரும் தயாராகுங்கள். அணுகுண்டு வீச்சின் ஒளி கண்ணைப் பறிக்கும். இதனால் அந்த சிறப்பு கண்ணாடிகளை அணிந்து கொள்ளுங்கள். ஒளி அடங்கும் வரை யாரும் அதைக் கழற்றக் கூடாது. கதிர்வீச்சிலிருந்து தப்ப உதவும் உடைகளையும் அணியுங்கள் என உத்தரவிடுகிறார் பைலட் டிபிட்ஸ். 

8.12 மணி 

ஜெர்மனியில் 60 முறை விமானம் மூலம் குண்டுகளை வீசி அனுபவம் வாய்ந்த மேஜர் தாமஸ் ப்ரீபீ தான் லிட்டில் பாய் குண்டை ஹிரோஷிமா மீது போட வேண்டும். தனது டார்கெட்டான Aioi Bridge பாலத்தை நோக்கி தனது பார்வையைத் திருப்புகிறார். விமானம் மணிக்கு 420 கி.மீ. வேகத்தில் பறந்து கொண்டிருக்க, இன்னும் 3 நிமிடம் தான் பாக்கி என அறிவிக்கிறார் பைலட். அணுகுண்டை செயல்பட வைத்த தாமஸ் 3 நிமிடங்கள் 43 நொடி என டைமரை செட் செய்கிறார்.

8.15 மணி 


எனோலா கே விமானத்தின் பாம் கதவுகள் திறக்க, லிட்டில் பாய் அணுகுண்டு கீழே பாய, 43 வினாடிகளை கவுண்ட் டவுன் செய்ய ஆரம்பிக்கிறது எனோலா கே விமானக் குழு. 31,000 அடிக்குக் கீழே ஏதும் அறியாத பச்சிளம் குழந்தைகள், முதியோர், பள்ளிச் சிறார்கள் என பல தரப்பட்ட மக்களும் தங்கள் அன்றாட வாழ்வில்... 

சரியாக தரையிலிருந்து 1,890 அடியை எனோலா கே எட்ட, 43 வினாடிகள் முடிய... இதுவரை உலகம் பார்த்திராத ஒரு மாபெரும் ஒளிப் பிழம்பு. 

இதுவரை கேட்டிராத ஒரு மாபெரும் ஒலி. அந்த குண்டு வெடித்த மையப் பகுதியில் இருந்து சுமார் 5 கி.மீ. சுற்றளவில் இருந்த மனிதர்கள், விலங்குகள் அனைத்தும் பஸ்பமாகிவிட, கட்டிடங்கள் சிதறி விட ஒன்றுமே மிச்சமில்லை. 

அடுத்த சில வினாடிகளில் அணுகுண்டின் ஒளி மறைய, ஹிரோஷிமாவை ஆக்கிரமிக்கிறது கடும் இருளும் புகை மூட்டமும். மயான அமைதி. அதே நேரத்தில் குண்டுபோட்ட எனோலா கே விமானம் கதிர்வீச்சிலிருந்து தப்ப உயரத்தை அதிகரித்தபடியே, எதிர் திசையில் பறக்க அவர்களையும் விரட்டுகிறது அணுகுண்டு வெடிப்பின் அதிர்வலைகள். 

கீழே குண்டு வெடித்த இடத்திலிருந்து அதன் அதிர்வலைகள் எல்லா பக்கமும் பரவியபடி, வழியில் இருந்த உயிர்கள், கட்டிடங்களை நிர்மூலமாக்க, துணை விமானியான லூயிஸ், நாம் என்ன காரியம் செய்துள்ளோம். கீழே என்ன நடக்கிறது. எத்தனை பேரை கொன்று கொண்டிருக்கிறோம் என தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அலற, விமானத்தில் இருந்த அனைவரிடத்திலும் அதே கேள்விகள். இப்படி ஒரு சேதமா என தாங்களே வெறித்தபடி வேகமாக அமெரிக்கா நோக்கி திரும்புகிறது எனோலா கே.


இந்த தாக்குதலில் உடனடியாக பஸ்பமானவர்கள் சுமார் 1 லட்சம் பேர். கதிர்வீச்சால் உடல் எரிந்து, தோல் எரிந்து போய், உடல் திசுக்கள், உறுப்புகள் பாதிக்கப்பட்டு அடுத்த நாட்களில், வாரங்களில், மாதங்களில் பலியானவர்கள் மேலும் 1 லட்சம் பேர். குண்டுவெடித்ததில் ஏற்பட்ட பயங்கரமான அதிர்வலையில் பல பேரின் கண்கள் அவர்களின் கண் குழிகளில் இருந்து வெளியேறி தொங்கியது தான் மகா கொடூரம்.

10 மணி. 

நாம் அமெரிக்காவில் தரையிறங்கும்போது ஜப்பான் சரணடைந்திருக்கும் என பேசியபடியே எனோலா கே விமானக் குழுவினர் பறந்து கொண்டிருக்க, ஜப்பான் சரணடைய மறுக்கிறது. இதையடுத்து அடுத்த 10 நாளில் நாகசாகி நகரிலும் இன்னொரு அணுகுண்டைப் போடுகிறது அமெரிக்கா. 

அடுத்த இரு வாரங்களில் செப்டம்பர் 2ம் தேதி அமெரிக்காவிடம் சரணடைகிறது ஜப்பான். ஹிரோஷிமாவில் முதல் அணுகுண்டு போடப்பட்டு இன்றுடன் 70 ஆண்டுகள் முடிகின்றன. 

இன்று காலை 8.15 மணிக்கு, அணுகுண்டு வெடித்த அதே நேரம், இன்று ஒட்டுமொத்த ஜப்பானிய மக்களும் 2 நிமிடம் மெளனமாய் நின்று மறைந்த அந்த உயிர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். 

ஹிரோஷிமாவில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பேசிய ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, ''உலகிலேயே அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான ஒரே நாடு நாம் தான். இதனால் உலகத்தில் அணுகுண்டே இல்லாத நிலையை உருவாக்க வேண்டிய முழுப் பொறுப்பும் உள்ள நாடும் நாம் தான்''. 

''என் வாழ்விலேய நான் செய்த மிகப் பெரிய தவறு, அணுகுண்டு தயாரிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்டுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் கையெழுத்து போட்டது தான். ஜெர்மன் அணுகுண்டு தயாரித்துவிடும் என்ற சந்தேகத்தில் தான் நான் இதைச் செய்து விட்டேன்...'' இப்படி மனம் வருந்தியது ஜப்பான் மீது அணுகுண்டு வீசப்பட்டதால் வேதனை அடைந்த அணுகுண்டு உருவாக காரணமான விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். 

ஜெர்மனி தோற்கடிக்கப்பட்ட நிலையில், ஜப்பானும் கிட்டத்தட்ட தோல்வி அடையும் நிலையில் தான் இருந்தது. இந் நிலையில் அணுகுண்டு போட்டுத்தான் தான் ஜப்பானை அடக்கியிருக்க முடியும் என்ற சூழல் அப்போது இல்லை. ஆனாலும் அணுகுண்டை வீசியது அமெரிக்கா. 

ரூஸ்வெல்ட், ஹாரி ட்ரூமென் ஆகியோர் காலத்தில் கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் வில்லியம் லே, ''போரில் ஈடுபடாத குழந்தைகளையும் பெண்களையும் பஸ்மாக்கித் தான் வெற்றி பெற முடியும் என்றால், அந்த வெற்றி எனக்குத் தேவையில்லை''

2 comments:

welcome ur comment,